பாடல் 996 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன ...... தனதானா |
ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன் சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல் நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே. |
ஒன்றாகி, பலவாகி, சிவ அனுபூதியாகி, தெளிவுப் பொருளாகி, மங்கலப் பொருளாயுள்ளது இதுவே என்று குரு செய்த உபதேசத்தை நான் உணர்ந்து அதன்படி நடக்காமல், ஏழு உலகங்களுக்கும் புலி நானே என்று, குதிரை, தேர், யானை இவற்றின் மீது ஏறும் மிகுந்த செருக்குடனேஅரசாட்சியை வகித்து, மாதர்களிடத்தே ஒரு போதும் நீங்காத காம இச்சையால் அழிவைத் தரும் தளர்ச்சியால் தீய வழியிலே இந்த உடலை நான் இழப்பதற்கு முன்பாக, ஒளிவளர் உண்மையை அடியேன் கண்டு உணர, (நீ ஞானசம்பந்தராய் வந்து), சிவ சாரூபம் வேண்டி வரம் கிடந்த திருமாலுக்கு அருள் பாலித்ததும்* எட்டாததுமான மேலான பொருளை உபதேசித்து அருள்வாயாக. பாம்புப் படுக்கை (ஆதிசேஷன்) மேல் துயிலும் திருமாலுக்கும், அயன் எனப்படும் பிரமனுக்கும் அரியவரான சிவபெருமானுக்கு ஒரு ஞான உபதேசம் செய்த காரணத்தால் குரு மூர்த்தியாய் விளங்கின நாதனே, தமது கருத்தை வைத்துப் பல பொழுதும் ஆசை கொண்டவராய் உன் திருப்புகழைச் சொல்லிப் போற்றும் புலவர்களுக்கு திருவருள் பாலித்து, திருவடியை அருள்கின்ற செல்வமே, வேகத்தை மேற்கொண்ட பாம்பைத் துவைக்கும் மயிலின் மீது ஏறி வேலாயுதத்தால் வீரம் பொருந்திய மாமரமாக நின்ற சூரனைஅழித்து, சிறப்புற்ற கிரெளஞ்ச மலை சாய்ந்து அழிய, விண்ணுலகத்தோர் பூமாரி பொழிந்து வேலாயுத மூர்த்தியே போற்றி எனக் கூறி வணங்க, கடல் கலங்கி ஓலமிட, வேலைச் செலுத்திய பெருமாளே.
* காஞ்சியில் திருமேற்றளி என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி, நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் - காஞ்சிப்புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 996 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தன, நான், மீது, வந்து, வேண்டி, செய்த, குரு, வாய்ச்சிவ, தோகை, வேட்கையி, பெருமாளே