பாடல் 995 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - ஆரபி
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன ...... தனதானா |
ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி தாமெ னாப்பர மார்த்தம ...... துணராதே ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட நேக நாட்டொடு காட்டொடு ...... தடுமாறிப் பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு பூவி னாற்றம றாத்தன ...... கிரிதோயும் பொக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல் போது போக்கியெ னாக்கையை ...... விடலாமோ தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ தீத தீ¨க்ஷப ¡£¨க்ஷக ...... ளறவோதுந் தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி யாக ராத்திகழ் கார்த்திகை ...... பெறுவாழ்வே மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்தப ராக்ரம ...... வடிவேலா வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே. |
உயிரைக் காத்து உய்விப்பது மேலான தகுதிவாய்ந்த செயலாதலால் அறம், பொருள், இன்பம், வீடு என்ற புருஷார்த்தங்கள் இவை என உணர்ந்து, மேலான உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளாமல், யானையின் மீதும், குதிரையின் மீதும், பல படைகள் புகழ்ந்திட வீட்டிலும், பல நாட்டிலும், காட்டிலும் அலைந்து தடுமாற்றம் உற்று, மாதர் மயக்கில் உருகி, புதுப்புது நடனங்களுடனும், பாட்டுக்களுடனும், மலரின் நறுமணம் நீங்காத மார்பகங்களாகிய மலைகளில் தோய்கின்ற சுகம் அனுபவிப்பதிலும், ஊடல் செய்வதிலுமான வாழ்க்கையின் விளையாடல்களிலே இரவும் பகலுமாக வீணாகப் பொழுதைப் போக்கி எனது உடலை விட்டுப் போதல் நன்றாகுமோ? தேவி பார்வதி இணைந்த மேலான பரிசுத்த மூர்த்தியாம் சிவபிரானுக்கு ஒப்பற்ற ஆத்ம தத்துவங்களுக்கு மேற்பட்டதான உபதேசங்களையும், பிரணவ விளக்கங்களையும் முழுமையாக ஓதின தேவனே, ஞான சூரியனே, நால்வகைக் கவிகளையும்* (திருஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்துப்) பாடி அருளிய அழகனே, மோக்ஷ நிலையாகிய விடுதலையை அளிக்கும் தியாக மூர்த்தியே, இரவிலே சுடர்விடும் (நக்ஷத்திரங்களாகிய) கார்த்திகைப் பெண்கள் பெற்ற பெருஞ்செல்வமே, விரும்பி உன்னை அடைந்தவர்களுக்கு அருளை அள்ளி அள்ளி வழங்கும் பன்னிரு கண்களை உடையவனே, சரவணபவ என்ற ஆறெழுத்துக்கு உரிய மூர்த்தியே, கிரெளஞ்ச மலையை வீழ்த்திய பராக்கிரம சாலியே, கூரிய வேலாயுதனே, வீரனே, அசுரர்கள் அலறும் கூச்சல் எழவும், வேதத்தலைவனாம் பிரமன் (பிரணவத்துக்குப் பொருள் கூறத்தெரியாமல்) நாவடங்கிப் போகவும், கடல் ஓலமிட்டுக் கலங்கவும் வேலை விரைவில் செலுத்திய பெருமாளே.
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 995 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தன, மேலான, மூர்த்தியே, அள்ளி, மிக்கது, மீதும், பொருள், வேலை, பெருமாளே, தகதிமி, தேவி