பாடல் 990 - வாகைமாநகர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தான தனத்த, தான தான தனத்த தான தான தனத்த ...... தனதான |
ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு மால கால விழிக்கு ...... முறுகாதல் ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு மார பார முலைக்கு ...... மழகான ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு மீறு காத லளிக்கு ...... முகமாய மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயி லூறல் குடித்து ...... மயல்தீர வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற வாகை மாந கர்பற்று ...... பெருமாளே. |
கரும்பு போல் இனிக்கும் பேச்சுக்கும், ஆளையே ஊடுருவி அறுக்கும் ஆலகால விஷம் போன்ற கண்களுக்கும், காம இச்சை என்னும் ஆசையைக் கொண்ட விலைமாதர்கள் அழைக்கின்ற ஓசை கொண்ட குரலின் தொனிக்கும், முத்து மாலை அணிந்த பாரமான மார்பகங்களுக்கும், அழகிய காதோலைக்கும், பொருந்திய குண்டல அணிக்கும், நெற்றிப்பட்டம் அணிந்துள்ள பெண் யானையின் நடை போன்ற நடைக்கும், குரவைக் கூத்தில் சாய்வது போல சாய்ந்துள்ள இடுப்புக்கும் நான் மோகம் கொண்டவனாகி, காம ஊறல் பரவும் அந்த இதழாகிய உறுப்பிலும், அந்த ஊறலை அறியும் காரமான அநுபவத்திலும் நினைவு கொண்டு வேகமாகச் செல்லும் ஆசையிலேயே அலைச்சல் உறுவேனோ? கை வளை விற்கும் வேலை ஆகும் பொருட்டு வளை விற்கும் செட்டியாய் வேடர் மகளான வள்ளிக்கு மிக்கெழும் ஆசையை ஊட்டிய மாயம் பூண்ட திருவுருவத்தை உடையவனே, பொருந்திய வேட்கையைக் கொடுத்தும், பெருமை வாய்ந்த அழகு உருவங்களைக் காட்டியும், இறுதியாக (நீ யார் என்ற) உண்மையை அறிவித்தும் (தினைப்புனத்தின்) பரண் மீதிலே மலர் மாலையை வள்ளியின் கூந்தலில் முடித்தும், அந்த மாதாகிய வள்ளியின் பாதங்களை வருடியும், அவள் வாயிதழ் ஊறலைப் பருகியும் மோகம் தீர அழகிய தோள்களில் அவளை அணைத்தும், ஆகாயத்தை அளாவும் மரங்கள் இருக்கும் சோலைகள் உள்ள வாகை மா நகரில்** (வள்ளியுடன்) வீற்றிருக்கும் பெருமாளே.
* நீடு கோலம் - வேட்டுவனாக, வேங்கையாக, வளைச் செட்டியாக, விருத்தனாக, இறுதியில் தெய்வமாகக் கோலங்கள் காட்டியதைக் குறிக்கிறது).
** வாகை மாநகர் செய்யார் அருகே திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவோத்தூர் வட்டத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 990 - வாகைமாநகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அந்த, தனத்த, வாகை, மோகம், பொருந்திய, மேவு, விற்கும், வள்ளியின், அழகிய, கொண்ட, நீடு, வேடர், மாலை, லூறல், பெருமாளே, வேலை