பாடல் 989 - முள்வாய் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த தன்னா தனந்த தந்த ...... தனதான |
மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து வெவ்வே ழன்று ழன்று ...... மொழிகூற விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க மென்னா ளறிந்த டைந்து ...... உயிர்போமுன் பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து பொய்யார் மனங்கள் தங்கு ...... மதுபோலப் பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு புன்னா யுளுங்க வின்று ...... புகுவாயே பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து பன்னா கணைந்து சங்க ...... முறவாயிற் பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று பண்ணூ துகின்ற கொண்டல் ...... மருகோனே முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து முன்னோர் பொருங்கை யென்று ...... முனையாட மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மா தர்வந்தி றைஞ்சு முள்வாய் விளங்க நின்ற ...... பெருமாளே. |
(வீட்டில் உள்ள) பெண்டிர், பெற்ற மக்கள், தான் பிறந்த நாடு, சுற்றத்தினர் யாவரும் கும்பலாகக் கூடியும், தனியாகவும் அங்கும் இங்கும் சென்று சென்று (என்னைப் பற்றிப்) பேச்சுக்கள் பேசி, ஆகாயத்தில் யமன் (கண்ணுக்குத்) தெரியாமல் மறைவாக இருந்து, மண் மேல் உள்ள இந்த உடம்பினின்று உயிர் அடஙகும் அந்த மெலிவு நாளைத் தெரிந்து வர, என் உயிர் போவதற்கு முன்பாக, பொன்னாலாகிய சதங்கை, தண்டை (ஆகியவற்றைக் கழலிலும்), முப்புரி நூல், கடப்ப மாலை (இவைகளைத் தோள்களிலும்) அணிந்துகொண்டு, மெய்ம்மையாளர்களின் மனங்களில் நீ வாசம் செய்து அவர்களுக்கு உதவுவது போல, இந்தப் பொல்லாதவனாகிய நான் வணங்கி உன்னை வேண்டுகின்ற சொல்லை நீ பொருட்படுத்தித் தெரிந்து கொண்டு, மனம் வருந்தும் இந்த இழிந்த நாயேனாகிய அடியேன் உள்ளத்திலும் அழகுறப் புகுந்து அருளுவாயாக. பல நாட்களாக வணங்கி வரும் அடியார்களாகிய தேவர்கள் தங்கள் பொன்னுலகத்தை அடைய அவர்களுக்கு உனது மேலான அழகிய கை கொடுத்து உதவி செய்தவனே, பாம்பணையில் படுக்கை கொண்டு, (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கை திருவாயில் வைத்து, பல சாஸ்திரங்களும் இச் சங்கத் தொனியில் முழங்குகின்றது என்னும்படி தேவர்களும் மயங்கி நின்று கேட்க, பலவித பண்களையும் ஊதிய மேகவண்ணனாகிய திருமாலின் மருகனே, மன்மதன் முன்னதாக நின்று (தனது) கரும்பு வில்லை எய்ய வேண்டிய இடத்தை அறிந்து முன்னதாகவே ஒரு போர் செய்யும் தொழிலை மேற்கொண்டது போல போர் புரிய நெருங்கி கச்சு நிமிர்ந்துள்ள மார்பினை உடையவர்களும், உண்மைக் குணம் கொண்டவர்களுமான மாதர்கள் வந்து வணங்குகின்ற முள்வாய்* என்னும் தலத்தில் விளக்கமுற நிற்கும் பெருமாளே.
* முள்வாய் ஆந்திராவில் உள்ள சித்தூர் நகரத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 989 - முள்வாய் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தன்னா, உள்ள, நின்று, தந்த, தனந்த, அவர்களுக்கு, தெரிந்து, கொண்டு, போர், என்னும், உயிர், வணங்கி, பெருமாளே, சதங்கை, ழன்று, தண்டை, பன்னா, முள்வாய், சென்று