பாடல் 982 - உத்தரகோசமங்கை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தன தானத் தனதன தந்தத் தத்தன தானத் தனதன தந்தத் தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான |
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத் திற்புத சேனைக் கதிபதி யின்பக் கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன் கட்டிள நீர்முக் கனிபய றம்பொற் றொப்பையி னேறிட் டருளிய தந்திக் கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப் பொற்சரி நாதப் பரிபுர என்றுப் பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான் பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற் றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற் றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ...... டிடுவேனோ தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற் குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக் கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித் திக்கய மாடச் சிலசில பம்பைத் தத்தன தானத் தடுடுடு வென்கச் செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி உற்பன மாகத் தடிபடு சம்பத் தற்புத மாகத் தமரர்பு ரம்பெற் றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா உட்பொருள் ஞானக் குறமக ளும்பற் சித்திரை நீடப் பரிமயில் முன்பெற் றுத்தர கோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே. |
(வேண்டுவோர்க்கு வேண்டியதைத் தரும்) கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பகரமான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், சோறு, வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர், வாழை, மா, பலா என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, (உன்) எழில்மிகு திருவடியை (முற்பிறப்பில்) வணங்கி, உனக்கு வாகனமாக (இப்பிறவியில்) அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சுநாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னைத் துதித்து, மனம் கசிந்து தியானித்து, நன்றாக நான் உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ நிலையையும் பெற்று, மெய்ஞ் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அப்போது உண்டாவதாகச் சொல்லப்படுகின்ற உடலில் ஊறும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ? போர்ச்செருக்குள்ள உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் குப்பைகளாக உள்ள உடல்களை உடைய அசுரர்களின் பிணங்களும் எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகளெல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளில் உள்ள யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்*) அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்க, தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்க, சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோற்றம் கொடுக்க, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊராகிய பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, அங்கே உள்ள செல்வங்களையும் அடைந்து பொன் மலர்களைச் சிந்த, வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே, உண்மைப் பொருளை அறிந்த ஞானியாகிய குற மகள் வள்ளியும், (ஐராவதமாகிய) யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட அந்த வாகனமாகிய மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை** என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
* அஷ்ட திக்கஜங்கள்:ஐராவதம், புண்டா£கம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் என்பன.
** உத்தரகோசமங்கை ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 982 - உத்தரகோசமங்கை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானத், அழகிய, பெற்று, உள்ள, தந்தத், தனதன, உடைய, அஷ்ட, போலவும், தேன், எட்டுத், வென்கச், ஞானக், கற்பக, ஞானப், ளாகத், மாகத், தடுடுடு, பெருமாளே