பாடல் 981 - திருவாடனை - திருப்புகழ்

ராகம் - ராகமாலிகை
தாளம் - கண்டசாபு - 2 1/2
தானான தத்ததன தானான தத்ததன தானான தத்ததன ...... தனதான |
ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால் ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி ஓயா முழக்கமெழ ...... அழுதோய நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது நாறா தெடுத்தடவி ...... யெரியூடே நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி நாடா தெனக்குனருள் ...... புரிவாயே மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும் வானோரு மட்டகுல ...... கிரியாவும் ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு மாலால முற்றவமு ...... தயில்வோன்முன் ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள் ஆடானை நித்தமுறை ...... பெருமாளே. |
மாமிசமும், உள்ளே நிறைந்திருக்கும் நோய்களும் வைத்து மூடப்பட்ட இந்த உடல் கேடுற்று அழியும்படி உயிர் போய்விட்டால், ஊரார்கள் கூட்டமாக வந்து ஐயோ ஐயோ என்று அவர்கள் அலறி அருகில் நெருங்கி ஓய்வில்லாத கூச்சல் உண்டாகும்படி அழுது, பின் ஓய்ந்து, பலவிதமான பல்லக்கின் மேலே பிணத்தைக் கிடத்தி, அப்பிணம் துர்நாற்றம் வீசுமுன்பு அதை எடுத்துக்கொண்டுபோய் சுடுகாட்டில் நெருப்பின் மத்தியிலே கூசாமல் வைத்து விட்டுவிட அவ்வுடல் சாம்பலாகும் என்ற நியதி உள்ள இந்தப் பிறவியை நான் விரும்பாதபடி எனக்கு உன் திருவருளைத் தந்தருள்வாயாக. பெரிய நாகமாகிய காளிங்கனின் புள்ளிகள் உள்ள படமுடியின்மேல் நடனம் செய்த மாயவன் திருமாலும், தேன் ஒழுகும் தாமரை மலர்மீது வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற பிரமனும், அஷ்டதிக் பாலகர்களும், தேவர்களும், சிறந்த அஷ்டகிரிகளில் உள்ளவர்களும், நீங்காத அரக்கர்களுடன், வானிலுள்ள கணங்கள் யாவும் பிழைக்கும்படியாக, பாற்கடலில் எழுந்த ஆலகாலவிஷம் அத்தனையும் அமுதமாக உண்டருளிய சிவபெருமான் முன்னொருநாள் ஆசாரத்துடனும், பக்தியுடனும் கேட்க, அவருக்கு சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து அருளியவனும், திருவாடானை* என்ற தலத்தில் நாள்தோறும் வீற்றிருப்பவனுமான பெருமாளே.
* திருவாடானை மானாமதுரையில் இருந்து சிவகங்கை வழியில் 44 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 981 - திருவாடனை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, தத்ததன, வைத்து, உள்ள, மேலே, மானாக, பெருமாளே