பாடல் 978 - ஆய்க்குடி - திருப்புகழ்

ராகம் - சாருகேசி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தாத்தனத் தானதன தாத்தனத் தானதன தாத்தனத் தானதன ...... தனதான |
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு மாப்புடைத் தாளரசர் ...... பெருவாழ்வும் மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல் வாழ்க்கைவிட் டேறுமடி ...... யவர்போலக் கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை கோத்தமெய்க் கோலமுடன் ...... வெகுரூபக் கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு கூத்தினிப் பூரையிட ...... அமையாதோ தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை சாய்த்தொடுப் பாரவுநிள் ...... கழல்தாவிச் சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி தாழ்க்கவஜ் ராயுதனு ...... மிமையோரும் ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு மாய்க்குடிக் காவலவு ...... ததிமீதே ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை ஆர்ப்பெழச் சாடவல ...... பெருமாளே. |
வாள் வீச்சுப் படுவதால் சேனைகள் யாவையும் அழியும்படி பகைவர்களை விரட்டியடிக்கும் செருக்குடன் அரசாட்சி புரியும் மன்னர்களது பெருவாழ்வும் இறுதியில் ஒரே கணப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகக் கடவதுதான் என்ற நிலையாமையை உணர்ந்து இல்லறத்தை விட்டுக் கரையேறும் உன் அடியார்கள் போல, ஒரு குறிக்கோளுடன் வாழவும், உன் திருவடிமலரினைப் பார்த்து யான் இளைப்பாறவும், வினைவசமாகி உழலும் இந்த உடம்பாகிய உருவத்தை பலவித அலங்காரங்களைச் செய்து துன்பங்களில் சிக்குண்டு வரும் இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டு இனிமேல் முடிவு பெறவே முடியாதோ? கால் பட்டாலே கோபத்துடன் சீறி எழும் விஷப் பாம்பைப் போல பாலன் மார்க்கண்டேயனிடம் (யமன்) குறிவைத்துத் தொடரவும், தமது நீண்ட திருவடியை நீட்டி பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கொடிய உருக்கொண்ட யமனை உதைத்த பரமசிவனார் (உன்னிடம் வேத மந்திர உபதேசம் பெறுவதற்காக) தமது முடியைத் தாழ்த்தி வணங்க, வஜ்ராயுதனாம் இந்திரனும், தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்க, பொன்னிறமான பிரம்மனை சிறையிலிட்ட ஆய்க்குடி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அரசனே, கடலிலே போர் புரிந்த அந்தச் சூரன் முதலிய அசுரர்களையும், திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தால் அந்த கிரெளஞ்சகிரியையும் பேரொலி உண்டாகும்படி அழிக்கவல்ல பெருமாளே.
* ஆய்க்குடி தென்காசியிலிருந்து வடகிழக்கே 5 மைலில் உள்ள தலம் - பால் பாயச நிவேதனம் சிறப்பு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 978 - ஆய்க்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தனத், தானதன, தமது, உள்ள, பெருமாளே, பெருவாழ்வும், என்னும்