பாடல் 977 - திருக்குற்றாலம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தான தனத்த தத்தன தத்தான தனத்த தத்தன தத்தான தனத்த தத்தன ...... தனதான |
முத்தோலை தனைக்கி ழித்தயி லைப்போரி கலிச்சி வத்துமு கத்தாம ரையிற்செ ருக்கிடும் ...... விழிமானார் முற்றாதி ளகிப்ப ணைத்தணி கச்சார மறுத்த நித்தில முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே வித்தார கவித்தி றத்தினர் பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ மெய்த்தேவர் துதித்தி டத்தரு பொற்பார்க மலப்ப தத்தினை மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே பத்தான முடித்த லைக்குவ டிற்றாட வரக்க ருக்கிறை பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே பற்பாசன் மிகைச்சி ரத்தைய றுத்தாத வனைச்சி னத்துறு பற்போக வுடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே கொத்தார்க தலிப்ப ழக்குலை வித்தார வருக்கை யிற்சுளை கொத்தோடு திரக்க தித்தெழு ...... கயலாரங் கொட்டாசு ழியிற்கொ ழித்தெறி சிற்றாறு தனிற்க ளித்திடு குற்றால ரிடத்தி லுற்றருள் ...... பெருமாளே. |
முத்தால் ஆகிய கம்மலைத் தாக்கி, வேலாயுதத்தைப் போரில் மாறுபட்டுப் பகைத்து, செந்நிறம் கொண்டு, முகமாகிய தாமரை மலரில் கர்வித்து நிற்கும் கண்களை உடைய மாதர்களின் முற்றாமல் நெகிழ்ந்து பெருத்துள்ளதாய், அழகிய கச்சு மேலுள்ள மாலையை அற்றுப் போகும்படி செய்த, நல்ல முத்து மாலை அழுத்துவதால் உண்டாகும் நகக் குறியைக் கொண்டதும், வித்தார* வகையைச் சேர்ந்த கவிகளைப் பாட வல்ல புலவர்களின் ஓலை நூல்களுக்கு ஒப்பானதாய் இணைந்துள்ளதாய் எழுந்துள்ள மலை போன்ற மார்பகத்தில் தினந்தோறும் அலைச்சல் உறுவேனோ? உண்மைத் தேவர்கள் போற்ற அவர்களுக்கு உதவும் அழகு நிறந்த தாமரைத் திருவடிகளை நானும் மெய்யான பக்தியுடன் வாழ்த்த அருள் புரிவாயாக. பத்துத் தலைகளான மலைகள் அறுபட்டு அசைந்து விழ, அசுரர்களுக்குத் தலைவனாகிய ராவணன் (போரில்) அழிந்து உயிர் விடும்படி வெற்றி கொண்டவனாகிய திருமாலின் மருகனே, பத்ம பீடத்தில் இருக்கும் பிரமனுடைய அதிகமாயிருந்த ஐந்தாவது தலையை அறுத்துத் தள்ளி, சூரியனைக் கோபித்து பற்கள் உதிரும்படி (தக்ஷயாகத்தில்) உடைத்தெறிந்த பரம்பொருளாகிய சிவ பெருமான் மகிழ்ச்சி கொள்ளும் பெருமானே, கொத்தாயுள்ள வாழைப் பழக் குலைகளும் விரிந்துள்ள பலாப்பழங்களின் குலைகளும் கொத்தாக அப்படியே உதிரும்படி குதித்துத் தாவுகின்ற கயல் மீன்கள் முத்துக்களைக் கொட்டி நீர்ச் சுழிகளில் தள்ளி ஒதுக்கி, சிறிய ஆற்றில் மகிழும் குற்றாலத்துச்** சிவபெருமான் அருகே வீற்றிருந்து அருளுகின்ற பெருமாளே.
* நால்வகைக் கவிகள் - ஆசு, மதுரம், வித்தாரம், சித்திரம்.** குற்றாலம் தென்காசிக்கு 5 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 977 - திருக்குற்றாலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தான, தத்தன, தனத்த, உதிரும்படி, குலைகளும், தள்ளி, பெருமாளே, வித்தார, போரில்