பாடல் 970 - . புரு.மங்கை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான |
வேனின்மத னைந்து பாணம்விட நொந்து வீதிதொறு நின்ற ...... மடவார்பால் வேளையென வந்து தாளினில்வி ழுந்து வேடைகெட நண்பு ...... பலபேசித் தேனினும ணந்த வாயமுத முண்டு சீதளத னங்க ...... ளினின்மூழ்கித் தேடியத னங்கள் பாழ்படமு யன்று சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ ராலிலையி லன்று ...... துயில்மாயன் ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த ஆரணமு குந்தன் ...... மருகோனே வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த மானொடுவி ளங்கு ...... மணிமார்பா மாமறைமு ழங்கு ஸ்ரீபுருட மங்கை மாநகர மர்ந்த ...... பெருமாளே. |
வேனில் பருவத்துக்கு உரிய மன்மதன் தனது ஐந்து மலர் அம்புகளைச் செலுத்த, மனம் வேதனை அடைந்து, தெரு மூலைகள் தோறும் நின்றுள்ள மாதர்களிடத்தே இதுவே சமயம் என்று வந்து அவர்கள் காலில் விழுந்து, ஆசை தீர நட்பான பல பேச்சுக்களைப் பேசி, தேனைக் காட்டிலும் அதிக நறு மணம் கொண்ட வாயிதழ் ஊறலை உண்டு, (அம்மாதர்களின்) குளிர்ந்த மார்பகங்களில் முழுகி, தேடி வைத்திருந்த செல்வம் எல்லாம் அழிக்க முயற்சி செய்து, அடைய வேண்டிய கதியை (வீட்டுப் பேற்றை) அடைதல் இல்லாமல் அலைந்து திரிவேனோ? பசுக் கூட்டங்களை மேய்த்து ஓட்டிச் செலுத்தியும், பெரிய பூமியை (ஓர் திருவடி கொண்டு) அளந்தும், ஓர் ஆலிலையில் ஊழி அன்று துயில் கொண்ட மாயன், இடையர் வீடுகளில் போய் பாலையும், தயிரையும் கலந்து உவகையுடன் பருகியவனும், வேதம் போற்றும் முகுந்தனுமாகிய திருமாலின் மருகனே, தேவர்கள் புகழ்ந்து போற்றிய தேவயானையுடனும், வேடர்கள் மகளாகிய மான் போன்ற வள்ளியுடனும் விளங்கும் அழகிய மார்பனே, பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற ஸ்ரீபுருட மங்கை (நாங்குநேரி) என்னும் பெரிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.
* நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 970 - . புரு.மங்கை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தந்த, பெரிய, நாங்குநேரி, கொண்ட, மங்கை, வந்து, ஸ்ரீபுருட, பெருமாளே