பாடல் 969 - . புரு.மங்கை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த தானதன தந்த தந்த ...... தனதானா |
கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து காதலுறு சிந்தை யுந்து ...... மடமானார் காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த காழ்கடிய கும்ப தம்ப ...... இருகோடார் பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை பீடையற வந்து நின்ற ...... னருள்தாராய் ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த ஏகமயி லங்க துங்க ...... வடிவேலா ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர் ஈடெறஇ ருந்த செந்தில் ...... நகர்வாழ்வே தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த சீரலர்கு ளுந்து யர்ந்த ...... பொழிலோடே சேரவெயி லங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த ஸ்ரீபுருட மங்கை தங்கு ...... பெருமாளே. |
மேகம் போன்ற கூந்தல் கலைந்து அலை பாய்வதாலும், நீண்ட குண்டலங்கள் அதற்கு ஒக்க அசைவுறுதலாலும், காம இச்சை கொண்ட எண்ணத்தை மேலெழுப்பும் இளம் பெண்கள் காமுகராகிய ஆடவர் உள்ளம் கலங்கும்படி செய்து, சண்டையிடுவதற்கு முந்தி வந்தது போல முன்னே எதிர்ப்பட்டு வருவதும், வைரம் போல உறுதியும் கடினமும் கொண்ட, குடம் போலவும், யானைத் தந்தம் போலவும் உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களை உடையவர்களின் பேரைச் சொல்லவந்தால் (அவர்களுடைய சேட்டையால்) பெண் குரங்கு, (அவர்களுடைய விஷத்தன்மையால்) பாம்பு, (அவர்களின் ஆணவத்தால்) யானை என்று சொல்லத் தக்கவர்கள், மன்மதனுக்கு உறுப்பாக அமைந்த விலைமாதர்கள் தங்கள் கண்கள் என்னும் வலையாலே, சிறந்த (என்) அறிவு சிதறிப் போய், மனம் நொந்து காம இச்சையால் அலைபாயும் மனத்தின் துன்பம் அற்றுப் போக, நீ வந்து உன்னுடைய திருவருளைத் தருவாயாக. அழகு பொருந்திய தண்டையை அணிந்த திருவடி அசைய வருகின்ற கந்தனே, ஒப்பற்ற (சூரனாகிய) மயிலை* அங்க அடையாளமாகக் கொண்டவனே, கூரிய வேலை ஏந்தியவனே, பெருமை பொருந்திய உமா தேவியின் மகனே, (சூரனுடைய இரு கூறில் ஒன்றாய் உன்னைச்) சந்தித்த* கோழியைக் கொடியாகக் கொண்டு, தேவர்கள் உய்யும் பொருட்டு வீற்றிருந்த திருச்செந்தூரின் செல்வனே, தேர்கள் நிரம்பிய நாற்சந்திகள் கொண்ட வீதிகளை உடையதும், நறு மணம் வீசும் சிறந்த மலர்கள் குளிர்ச்சியுடன் மேம்பட்டு விளங்கும் சோலைகளுடன் ஒன்று சேரவே விளங்கும் பரிசுத்தமான தடாகங்கள் பொருந்தியுள்ள ஸ்ரீபுருஷமங்கையில் (நாங்குநேரியில்**) வீற்றிருக்கும் பெருமாளே.
* முருகனின் வேல் சூரனின் உடலைப் பிளந்ததும் ஒரு பகுதி மயிலாகவும், இன்னொரு பகுதி சேவலாகவும் முருகனைச் சரணடைந்தன.
** நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 969 - . புரு.மங்கை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, கொண்ட, தானதன, ருந்த, கொண்டு, சந்தி, பெருமாளே, அவர்களுடைய, விளங்கும், பகுதி, பொருந்திய, சிறந்த, துங்க, போலவும், வந்து, முந்தி, லங்க, சிந்தை, லைந்த, வந்த, னங்க, வலையாலே, கண்கள், தங்கள், நொந்து