பாடல் 966 - மதுரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தத்தந் தான தானன தனதன தத்தந் தான தானன தனதன தத்தந் தான தானன ...... தனதான |
மனநினை சுத்தஞ் சூது காரிகள் அமளிவி ளைக்குங் கூளி மூளிகள் மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக வளைகுழை முத்தும் பூணும் வீணிகள் விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள் வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிக ளிச்சம் பேசி கூசிகள் குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக் கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட அருளமு தத்தின் சேரு மோர்வழி குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய் தனதன தத்தந் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி தவில்முர சத்தந் தாரை பூரிகை வளைதுடி பொற்கொம் பார சூரரை சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா தினைவன நித்தங் காவ லாளியள் நகைமுறை முத்தின் பாவை மான்மகள் திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே திரிபுர நக்கன் பாதி மாதுறை யழகிய சொக்கன் காதி லோர்பொருள் செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே. |
மனத்தில் நினைக்கின்ற முற்றிய சூதான எண்ணங்களையே கொண்டவர்கள், அமர்க்களங்களைச் செய்யும் பேய் போன்ற விகாரம் படைத்தவர்கள், ஆணவ பலத்தை நாள் தோறும் வலியக் காட்டுகின்ற மாதர்கள், அழகாக (கையில்) வளையல், (காதில்) குழைகள், (மார்பில்) முத்து மாலை இவைகளை அணிந்துள்ள வீண் பொழுது போக்கிகள், பயனற்றவர்கள், பிறரால் மெச்சப்படுதலில் ஆசை கொண்டு ஆடிப் பாடுபவர்கள், வருவதற்கு மிக்க வெட்கம் கொண்டவர்கள் போல ஓடுபவர்கள், தெருவிலே கொஞ்சிப் பேசுபவர்கள், அன்பு கொண்டவர்கள் போலப் பேசுபவர்கள், சரசம் செய்பவர்கள், தங்கள் விருப்பத்தைப் பேசி நாணம் கொள்ளுபவர்கள், தந்திரம் உள்ளவர்கள், பிசாசு அனையவர்கள், கொள்ளைக்காரிகள், பொருளாசை கொண்டவர்கள், (இத்தகைய வேசியர் மீது) எனக்கு உள்ள மோகம் சிதறுண்டு விழுந்து ஒழிய, உனது திருவருளாகிய அமுதத்தைச் சேர்வதற்கு ஒரு வழியைக் காட்டும் அடையாளத்தில் என்னைச் சேர்ப்பித்து உன்னுடைய திருவடியைக் கூடுதற்கு அருள் புரிக. தனதன தத்தத் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு தகுதிகு தத்தத் தீத தோதக என்ற இத்தகைய ஒலிகளுடன் பறைகள், மேளம், போர்முரசுகள் ஒலி செய்யவும், நீண்ட ஊதுங் குழல், வளைந்த குழல், சங்கு, உடுக்கை, பொலிவுள்ள ஊது கொம்பு முதலியவை நிறைந்து ஒலி செய்யவும், அசுரர்களை போரில் யாவரும் சிதறுண்டு அழிந்து பொடிபட வேலைச் செலுத்தியவனே. தினைப் புனத்தை நாள்தோறும் காவல் செய்து கொண்டிருந்தவள், பற்களின் வரிசை முத்துப் போல உள்ள பதுமை போன்ற அழகி, மான் வயிற்றில் பிறந்த அழகியாகிய வள்ளி, மகிழ்ச்சியில் விளக்கம் பெற தினமும் கூடி விளையாடிய முருகனே, முப்புரங்களைச் சிரித்தே எரித்தவனும், இடது பாதியில் பார்வதி உறையும் அழகிய சொக்கநாதனாகிய சிவபெருமான் காதில் ஒப்பற்ற பிரணவப் பொருள் புகும்படி ஓதி அருளி, தென் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 966 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானன, தத்தந், கொண்டவர்கள், பேசுபவர்கள், காதில், பெருமாளே, இத்தகைய, சிதறுண்டு, குழல், செய்யவும், தத்தத், கூடி, உள்ள, தோதக, பாறி, பேசி, வெட்கம், காரிகள், டுடுடுடு, டுட்டுண், தகுதிகு, டூடுடு, டூடு, நித்தங்