பாடல் 956 - மதுரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான |
அலகில வுணரைக் கொன்ற தோளென மலைதொளை யுருவச் சென்ற வேலென அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டா£க அடியென முடியிற் கொண்ட கூதள மெனவன சரியைக் கொண்ட மார்பென அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ கலகல கலெனக் கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க வாதிகள் கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங் கலைகளு மொழியப் பஞ்ச பூதமு மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென் இலகுக டலைகற் கண்டு தேனொடு மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன் இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே எழுதென மொழியப் பண்டு பாரதம் வடகன சிகரச் செம்பொன் மேருவில் எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ வலம்வரு மளவிற் சண்ட மாருத விசையினும் விசையுற் றெண்டி சாமுக மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு மரகத கலபச் செம்புள் வாகன மிசைவரு முருகச் சிம்பு ளேயென மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே. |
கணக்கற்ற அசுரர்களைக் கொன்று அழித்த உனது தோளைப் புகழ்ந்தும், கிரெளஞ்ச மலையைத் தொளை படும்படி ஊடுருவிச் சென்ற உனது வேலைப் புகழ்ந்தும், அழகிய பொன்னாலாகிய தண்டைகள் சூழ்ந்துள்ள தாமரைபோன்ற உனது திருவடியைப் புகழ்ந்தும், வெண்தாளியினது தண்மையான பூவை அணிந்த உனது திருமுடியைப் புகழ்ந்தும், வேட்டுவச்சியான வள்ளியை அணைந்த மார்பு என்று உனது மார்பைப் புகழ்ந்தும், ஆறுமுகம் என்று உனது ஆறு திருமுகங்களைப் புகழ்ந்தும், உள்ளம் நெகிழ்ந்து என்னுடைய எலும்புகள் எல்லாம் உருகும்படியான அன்பு எனக்குக் கிட்டாதோ? கலகலகலவென்று பேரொலியுடன் கண்ட பேர்களுடன் கூச்சலிட்டு சமயக் குற்றங்களை எடுத்துப் பேசி வாதம் செய்வோர்கள் உரக்கக் கத்தும் பல தவறுகள் மிகுந்த, கொதிக்கும் கோபம் நிறைந்த, சொற்களால் ஆகிய பொய்ச் சாத்திர நூல்கள் ஒழிந்து, என் மீது ஐந்து பூதங்களின் செயல்களும் அடங்கி நீங்க, சொல்லப் போனால், ஓய்தல் இல்லாத அந்தக்கரணமாகிய மனம் ஒடுங்கி ஒழிய, நீ எனக்கு உபதேசித்து அருளிய ஞானத்துக்கு உள்ள பெருமைதான் எத்தனை ஆச்சரியமாய் உள்ளது. நல்ல விளக்கமுடைய கடலை, கற்கண்டு, தேன் இவைகளுடன் ருசிகரமான தினை மாவு, வெல்லப் பாகு இவற்றைக் கலந்து மகிழ்ச்சியுடன் உண்ணும் விநாயகர் ஒற்றைக் கொம்பால் வியாச முனிவர் எழுதும்படி வேண்ட, முன்பு, பாரதக் கதையை வடக்கே உள்ளதும் கனத்த உச்சிகளை உடையதுமான செம்பொன் மயமான மேரு மலையில், எழுதிய பவள மலையைப்போன்ற கணபதி, அன்று தந்தையாகிய சிவபெருமானைச் சுற்றி வந்து வலம் வரும் நேரத்துக்குள், சூறாவளியின் வேகத்திலும் வேகமாக எட்டு திசையிடங்களைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்த்து, பாம்பை உண்டு உலாவுகின்றதும், பச்சைத் தோகையைக் கொண்டதும், வலிமையான பக்ஷியுமாகிய மயில் வாகனத்தின் மீது வந்த முருகனே, சிங்கத்தை அடக்கவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள்ளே (சரபப் பக்ஷியே*) என்று புகழ்ந்து, மதுரைத் தலத்தில் வழிபட்டு தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே.
* நரசிம்மராக வந்த விஷ்ணு ஹிரண்யனின் வதைக்குப் பின் வெறி அடங்காமல் திரிந்தார். சிவபிரான் தமது இன்னொரு அம்சமாகிய சரபப்பக்ஷியாக வந்து நரசிம்மரின் ஆணவ ஆட்டத்தை அடக்கினார். முருகனும் அதுபோன்றே ஒரு சிவ அம்சம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 956 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - புகழ்ந்தும், உனது, தந்த, கொண்ட, தனதன, தானன, தனனத், தம்பிரானே, வந்து, வந்த, எழுதிய, மீது, மொழியப், அழகிய, சென்ற, கண்ட, பங்க, கண்டு, செம்பொன்