பாடல் 957 - மதுரை - திருப்புகழ்

ராகம் - நீலாம்பரி தாளம் - ஆதி 2 களை
- எடுப்பு - 3/4 இடம்
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த ஆறுமுக வித்த ...... கமரேசா ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும் ஆரணமு ரைத்த ...... குருநாதா தானவர் குலத்தை வாள்கொடு துணித்த சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா தாளிணைக ளுற்று மேவியப தத்தில் வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே வானெழு புவிக்கு மாலுமய னுக்கும் யாவரொரு வர்க்கு ...... மறியாத மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க மாமயில் நடத்து ...... முருகோனே தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி சேரமரு வுற்ற ...... திரள்தோளா தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல்கொடு தணித்த ...... பெருமாளே. |
யானைமுக விநாயகனுக்கு நேராகப் பின்தோன்றிய அன்பனே, ஆறு திருமுகங்களை உடைய ஞான வித்தகனே, தேவர்களின் கடவுளே, ஆதிதேவன் சிவபிரானுக்கும் வேத முதல்வன் பிரமனுக்கும் வேத மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, அசுரர் குலத்தையே வாளினால் வெட்டி வீழ்த்திய நிறைந்த சாமர்த்தியம் மிகுந்த பராக்கிரமசாலியே, உன் இரு திருவடிகளிலும் வீழ்ந்து பொருந்தும் பதவியில் நல்வாழ்வோடு நான் சிறந்து விளங்க அருள் புரிவாயாக. மேல் ஏழு உலகங்களுக்கும்* திருமாலுக்கும், பிரம்மனுக்கும் வேறு யாருக்குமே அறியமுடியாத சிறந்த மதுரைத் தலத்து சொக்கேசர் சிவனும், பார்வதியும் மகிழ அழகிய மயிலின் மீதேறி அதனைச் செலுத்தும் முருகனே, தேன் மிகுந்த வள்ளிமலைத் தினைப்புனத்தில் மான் ஒத்த கண்ணாள் குறத்தி வள்ளி உன்னைச் சேரும்படியாக அவளை அணைத்திட்ட திரண்ட புயங்களை உடையவனே, தேவர்களது மனத்தில் சூரனைப் பற்றித் தோன்றிய அச்சத்தை உன் வேலாயுதத்தால் போக்கிய பெருமாளே.
* மேல் ஏழு உலகங்கள் - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹலோகம், தபலோகம், ஜனலோகம், சத்யலோகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 957 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தத்த, மிகுந்த, மேல், குறத்தி, னுக்கும், பெருமாளே