பாடல் 942 - திருமுருகன்பூண்டி - திருப்புகழ்

ராகம் - துர்கா
தாளம் - சது.ர .ம்பை
தனதனனந் தாந்தத் ...... தனதான |
அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச் சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய் சடுசமயங் காண்டற் ...... கரியானே சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே. |
உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து பலமுறையும் பிரார்த்தித்து, எனது அறிவினில் உன்னை உணர்ந்து வருஷத்திற்கு ஒரு நாளாவது தவ ஒழுக்கத்தையும் ஜெபநெறியையும் மேற்கொண்டு உள்ளம் கனிந்து, உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக. சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்றுரைத்து, குதித்து ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்துவாய். ஆறு** சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே, சிவகுமாரனே, உன்னை அன்பு கொண்டு நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே, திருமுருகன்பூண்டி*** என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* நாரதர் செய்த யாகத்தில் தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகு மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு - கந்த புராணம்.
** ஆறு சமயங்கள் - காணாபத்யம், செளரம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம்.*** திருமுருகன்பூண்டி திருப்பூருக்கு வடக்கே 8 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 942 - திருமுருகன்பூண்டி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - செய்து, உன்னை, பெருமாளே