பாடல் 927 - கருவூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன தத்தன தத்த தனதனத் ...... தனதான |
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர் முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம் கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங் கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ் வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே. |
மயக்குவதாகி இரண்டு காதின் குண்டலங்களையும் தொடுகின்ற கடைக் கண்ணின் தன்மை இதுவே என்று (காண்போர்) உள்ளத்தைக் கவர்ந்து உறவு முறையைக் கூட்டி வைக்கும் பொது மகளிர்களின், முத்து, ரத்தினம், மரகதம் இவை வைத்து ஆக்கப்பட்ட விநோதமான மேலாடை இறுக்கச் சுற்றியுள்ள, பூசிய அகிலின் நறு மணம் கொண்ட மார்புப் பாரங்களைக் கட்டிப் பிடித்துத் தழுவி, நகங்களின் நுனி பட்டுள்ள கழுத்தில் அழுத்தமாக அணைத்த கைகள் சோர்ந்து, பேச்சும் அற்றுப்போய், உயிரும் சோரும்படியான கடினமான புணர்தலின் அனுபவத்தை விட்டு ஒழித்த தூர்த்த காமுகனாகிய எனக்கு, வகைப்பட்ட ஒழுக்க நெறி ஒன்றை (உன் திருவடியை) அன்புடனே தந்து அருள்வாயாக. வெட்ட வல்ல வாளின் முனையைக் கொண்டு (பகைவர்களை) அழித்த குணம் கொண்ட வீரனே, போர்க் களத்தில் வலிமையாளனே, கோபம் கொள்பவனே, பலவிதமான படை வீரனே, வெற்றியைப் பெறுகின்ற வேடர்கள் பெற்ற கொடி போன்ற வள்ளியின் மீது மிகவும் மகிழ்ச்சி கொண்ட பேரறிஞனே, சித்த* மூர்த்தியே, வயலூரில் வீற்றிருக்கும் குமரேசனே, (அச்சத்தால்) பற்கள் ஒன்றோடொன்று பட்டு இறுகும்படி அசுரர்கள் அளவு கடந்து பயப்பட, வலிமையோடு ஒற்றைக் காலால் தாவி நடக்கும் பேய்கள் சூழ்ந்துள்ள வேலனே, (நான் என்னும் ஆணவம்) அழிந்தவர்களுக்கு உற்ற துணையாக இருந்து, அவர்களை விரும்பி திருவருள் பாலிக்கும் மேலானவனே, பசுபதீசுரர் என்னும் நாமம் படைத்த சிவபெருமானுடைய தலமாகிய கெர்ப்ப புரத்தில் (கருவூர் என்னும் ஊரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.
* சித்தன் - இது முருகன் திருநாமங்களில் ஒன்று, சித்தத்தை நிறைப்பவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 927 - கருவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தத்தன, என்னும், தத்த, வீரனே, வீற்றிருக்கும், பெருமாளே, தனதன, மரகதம்