பாடல் 908 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - கேதாரம்
தாளம் - அங்கதாளம்
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை மருவு முருவமு மலமல மழகொடு குலவு பலபணி பரிமள மறசுவை ...... மடைபாயல் குளிரி லறையக மிவைகளு மலமல மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல ...... மொருநாலு சுருதி வழிமொழி சிவகலை யலதினி யுலக கலைகளு மலமல மிலகிய தொலைவி லுனைநினை பவருற வலதினி ...... யயலார்பால் சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு முறவு மலமல மருளலை கடல்கழி துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற ...... அருள்வாயே விருது முரசுகள் மொகுமொகு மொகுவென முகுற ககபதி முகில்திகழ் முகடதில் விகட இறகுகள் பறையிட அலகைகள் ...... நடமாட விபுத ரரகர சிவசிவ சரணென விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் ...... வடிவேலா மருது நெறுநெறு நெறுவென முறிபட வுருளு முரலொடு தவழரி மருகசெ வனச மலர்சுனை புலிநுழை முழையுடை ...... யவிராலி மலையி லுறைகிற அறுமுக குருபர கயலு மயிலையு மகரமு முகள்செநெல் வயலி நகரியி லிறையவ அருள்தரு ...... பெருமாளே. |
இரத்தம், புழுக்கள், நீர், மலம், மயிர், சதை ஆகிய இவை பொருந்திய உருவை உடைய இந்த உடல் எடுத்தது போதும் போதும். அழகோடு விளங்கும் பல விதமான நகைகளும், நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும், ஆறு சுவைகள் கூடிய உணவும், படுக்கையும், குளிர் இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட வீடும் - இவைகள் யாவும் போதும் போதும். மனைவி, குழந்தைகள், தாயார், உடன் பிறந்தவர்கள், உறவு முறைகளைக் கூறி குலவும் சுற்றத்தினர் இவர்களும் போதும் போதும். ஒரு நான்கு மறைகளின் வழியை எடுத்துக் கூறும் சைவ சித்தாந்த நூல்களைத் தவிர வேறு உலக சம்பந்தமான நூல்களை ஓதுவதும் போதும் போதும். விளங்கி நிற்பவனும், அழிவில்லாதவனுமாகிய உன்னை நினைப்பவர்களது நட்பைத் தவிர, இனி பிறரிடத்தே திரிவது நல்லது என்று அவர்கள் வசப்பட்டு, அவர்களை வழிபடுகின்ற நட்பும் போதும் போதும். நின் திருவருள் அலை வீசும் கடலின் சங்கமத் துறை வழியில் செல்லும் அறிவை என் மனம் மகிழும் பொருட்டு நீ அருள்வாயாக. வெற்றிச் சின்னமான பறைகள் மொகு மொகு மொகு என்று பேரொலி செய்ய, கருடன் மேகம் விளங்கும் உச்சி வானத்தில் அகன்ற இறகுகளைக் கொண்டு வட்டமிட, பேய்கள் நடனம் செய்ய, தேவர்கள் அரகர சிவசிவ உன் அடைக்கலம் என்று ஒலி செய்ய, பொருந்திய சூரியனும், குளிர்ச்சி நிறைந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வர, தீச்செயலைக் கொண்ட அசுரர்கள் பொடிபட்டு அழிய, போர் செய்த கூர்மையான வேலாயுதனே. இரண்டு மருத மரஙகள் நெறு நெறு நெறு என்று முறிபடும்படி உருண்டு சென்று (இடுப்பில் கட்டிய) உரலுடனே தவழ்ந்திட்ட கண்ணனாம் திருமாலின் மருகனே, செந்தாமரை மலர்கின்ற சுனையும், புலி நுழையும் குகையும் கொண்ட விராலிமலையில் வீற்றிருக்கும் ஆறு முகனே, குருபரனே. கயல் மீன்களும், மயிலை என்னும் மீன்களும், மகர மீன்களும் தாவித் திரிகின்ற செந்நெல் வயல்களைக் கொண்ட வயலூர்ப் பதியில்* அமரும் இறைவனே, திருவருள் பாலிக்கும் பெருமாளே.
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 908 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போதும், தனதன, மலமல, கொண்ட, தகதிமி, மொகு, நெறு, மீன்களும், செய்ய, வயலூர், திருவருள், விளங்கும், சிவசிவ, மனைவி, பெருமாளே, பொருந்திய, உடைய, தவிர