பாடல் 909 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன ...... தந்ததான |
குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை குறியீர்தனி செறியீரினி ...... யென்றுபாடிக் குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை குலையாவல்கு லளையாவிரு ...... கொங்கைமீதிற் பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள் பகையேயென நினையாதுற ...... நண்புகூரும் பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர பதிநேருநி னருளால்மெயு ...... ணர்ந்திடேனோ வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன விசையேழ்பரி ரவிசேயெனு ...... மங்கராசன் விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன் விதிதேடிய திருவாளிய ...... ரன்குமாரா அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை யகிலாரம தெறிகாவிரி ...... வண்டல்மேவும் அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர அமராபதி யதில்வாழ்பவர் ...... தம்பிரானே. |
பேச்சு குயிலின் குரல் தானோ, கண்கள் அம்போ, இடுப்பு கொடியோ, நடை பெண் யானை போன்றதோ, இந்த அழகைத் தெரிந்து கொள்ளுங்கள், இனிமேல் தனியாக வந்து நெருங்கிப் பழகுங்கள் என்றெல்லாம் (விலைமாதர்களைப்) புகழ்ந்து பாடி, கொஞ்சிப் பேசி அவர்களுடைய காலைப் பிடித்தும், வாயிதழைக் கடித்தும், நகத்தால் கீறியும், ஆடையைக் கலைத்தும், பெண்குறியில் திளைத்தும், இரண்டு மார்பகங்கள் மீது நெருங்கிப் பழகியும் மனம் களிப்பதற்கு இடமாயுள்ளவர்களும், காம மயக்க சுகக் கடல் போல் உள்ளவர்களுமான அழகான விலைமாதர்கள் பகைத்து விலக்கத் தக்கவர்கள் என்று நான் நினைக்காமல் இருக்கிறேனே, பசு (ஆன்மா), பாசம் (ஆணவம், கர்மம், ஆகிய தளையாகிய மும்மலக்கட்டு) ஆக எல்லாவற்றுக்கும் மேம்பட்ட, ஆதரவை மிகக் காட்டும் நிறை பொருளே, ஒளிக்கு இருப்பிடமானவனே, இறைவனாகிய உன்னிடத்தில் உள்ள திருவருளால் உண்மையான மெய்ப் பொருளை நான் உணர மாட்டேனோ? ஒளி வீசும் ஆயிரக் கணக்கான கிரணங்களை வீசுபவனும், உதய காலத்தில் இருளைப் போக்குபவனும், வேகமாகச் செல்லும் ஏழு குதிரைகளைக் கொண்டவனுமான சூரியனின் பிள்ளையாகிய அங்க நாட்டு அரசனான கர்ணன் அம்புகள் நிறைந்த போரில் தனக்குப் பகையாயிருந்த பேடி (அருச்சுனனுடைய) கை அம்பால் இறந்து படும் போது, (அந்தக் கர்ணனுக்குத்) தரிசனம் தந்தவனாகிய திருமாலும், பிரமனும் தனது முடியைத் தேடிய செல்வ நாயகனான சிவபெருமானுடைய குமாரனே, பக்கங்களில் உள்ள ஊர்கள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் மயில் வாகனனே, பல வகையான கலைமான்கள், பிற வகையான மான்கள், புலி, யானைகளையும், அகில், சந்தனம் இவைகளையும் தள்ளி வீசிக் கொண்டு வரும் காவிரி நதியின் நீர் மண்டிய பொடி மண் உள்ளதும், அதிகமாக மனதுக்கு இனிமை தருவதுமான வயலூரில் உலவும் வலியவனே, முருகனே, ஈசுவரனே, பொன்னுலகில் வாழும் தேவர்களின் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 909 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதானன, வகையான, உள்ள, நெருங்கிப், தம்பிரானே, நான்