பாடல் 906 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தான தான தனதன தனனத் தான தான தனதன தனனத் தான தான தனதன ...... தனதான |
கமலத் தேகு லாவு மரிவையை நிகர்பொற் கோல மாதர் மருள்தரு கலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள் கலவிக் காசை கூர வளர்பரி மளகற் பூர தூம கனதன கலகத் தாலும் வானி னசையுமி ...... னிடையாலும் விமலச் சோதி ரூப இமகர வதனத் தாலு நாத முதலிய விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும் வெயிலெப் போதும் வீசு மணிவளை அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர் விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ சமரிற் பூதம் யாளி பரிபிணி கனகத் தேர்கள் யானை யவுணர்கள் தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லுருவோனே சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர் புகழக் கானி லாடு பரிபுர சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா அமரர்க் கீச னான சசிபதி மகள்மெய்த் தோயு நாத குறமகள் அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலா அருளிற் சீர்பொ யாத கணபதி திருவக் கீசன் வாழும் வயலியின் அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே. |
தாமரையில் விளங்கும் லக்ஷ்மிக்கு ஒப்பான அழகிய அலங்காரம் உள்ள விலைமாதர்கள் மீது மோக மயக்கத்தைத் தருகின்றதும், கலக்கம் தரும் காம சாஸ்திரத்தை முற்றும் உணர்ந்த இளைஞர்களின் புணர்ச்சி இன்பத்துக்கு ஆசை மிக்கெழும்படியாகவும், நிரம்பிய நறு மணம் உள்ள பச்சைக் கற்பூரம், அகில் புகை போன்றவைகளைக் கொண்ட மார்பகங்கள் எழுப்பும் மனச் சலனத்தாலும், ஆகாயத்தில் அசையும் மின்னல் போன்ற இடுப்பாலும், களங்கம் இல்லாத ஒளிமயமான பனிக் கிரணம் கொண்ட சந்திர பிம்பத்தை ஒத்த முகத்தாலும், பாட்டு முதலியவை கலந்து எழச் செய்யும் வண்டுகள் சூழ்ந்துச் சுழலும் இருண்ட கரிய கூந்தலாலும், எப்போதும் ஒளி வீசுகின்ற ரத்தின மாலைகளை அணியும் அழகிய தோள்களாலும், மாவடுவின் கீற்றைப் போன்ற கண்களின் பார்வையாலும், இனிமேல் நான் துன்பம் அடைவேனோ? போரில் பூதம், யாளி, குதிரை இவைகளைப் பிணித்துக் கட்டிய பொன் மயமான தேர்கள், யானைகள், அசுரர்கள் ஆகியவை பொடிபட்டு அழிய, கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்திய வலிமையான உருவத்தனே, கூட்டமான பேய்கள் வாழி என்று எதிரே நின்று புகழ, சுடு காட்டில் (சிவனுடன்) நடனம் செய்யும் சிலம்பணிந்த திருவடிகளை உடைய, தன்னிகரில்லாத வீரம் வாய்ந்த தாயாகிய பார்வதி மனம் மகிழும் வீரனே, தேவர்களுக்குத் தலைவனான, இந்திராணியின் கணவனாகிய இந்திரனின் மகளான தேவயானையின் உடலைத் தழுவும் நாதனே, குறப் பெண்ணாகிய வள்ளி உன்னை அணைவதற்கு வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்த நீதிமானே, திருக்கையில் கொண்ட வேலாயுதனே. திருவருள் பாலிப்பதற்குப் புகழ் பெற்ற, பொய்யுறாத கணபதியும்*, அழகிய அக்னீசுரர் என்னும் பெயருடைய சிவபெருமானும் வீற்றிருக்கும் வயலூரின்** அழகிய கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமாளே.
* இவரே "செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு" என்று அருணகிரிநாதருக்கு அருளினார். அந்தப் பாடல்தான் 'பக்கரை விசித்ரமணி' ஆகும்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 906 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, கொண்ட, தனதன, தனனத், உள்ள, திருப்புகழ், வயலூர், செய்யும், வாழி, பூதம், யாளி, தேர்கள், பேய்கள், பெருமாளே