பாடல் 905 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனாத் தனதன தனனாத் தனதன தனனாத் தனதன ...... தனதான |
கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல் கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும் கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை கடிபோற் பணியரை ...... யெனவாகும் உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ ளுடையாற் கெறுவித ...... நடையாலும் ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும் ஒழியாத் துயரது ...... தவிரேனோ குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள் கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள் குடியேற் றியகுக ...... வுயர்தாழை மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி வயலூர்ப் பதிதனி ...... லுறைவோனே மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே. |
கடல் போல ஆழமாகவும், அம்பு போல கூர்மையாகவும் உள்ள கண்கள், வில்லைப் போலவும் பிறைச் சந்திரன் போலவும் வளைந்த நெற்றி, கொவ்வைப் பழம் போலவும், பவளம் போலவும் உள்ள வாயிதழ், அழகு பொருந்திய யானையைப் போலவும், மலையைப் போலவும் உள்ள மார்பகங்கள், கொடி போலவும் உடுக்கை போலவும் உள்ள இடுப்பு, காவலிடம் போலவும் பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறி என்று உவமானம் சொல்லத்தக்க தேகத்தைக் காட்டும் இன்ப நிலைக்கு எடுத்துக் காட்டான கொள்கலம் இவள் (என மயங்கி), அவளது ஆடையாலும் செருக்குள்ள நடை அழகினாலும் (இவளை விட்டு) ஒரு நாள் கூட பிரிந்திருப்பது முடியாத காரியம் என்று சுழற்சியுறும் நீங்காத துன்பத்தைத் தொலைக்க மாட்டேனோ? அசுரர்களின் உடலினின்றும் குடலை இழுத்து காக்கை, நரி, கொள்ளி வாய்ப் பிசாசுகள், பேய்கள் யாவும், நிறைந்த கொல்லுதலை உடைய போர்க் களத்தில் நாள்தோறும் (குடலை) அடைந்து உண்ண, தேவர்களை விண்ணுலகில் குடி ஏற்றிய குகனே, உயர்ந்த தாழையின் மடல் கீற்றினில் உண்டாகின்ற வாசனை மிக்க (தாழம்) பூக்கள் உள்ள சோலைகள் நிறைந்த வயலூரில்* வாழ்பவனே, வள்ளிமலையில் வாழும் கொடிய வேடர்களுடைய மகள் வள்ளியின் மேல் விருப்பம் மிகக் கொண்டுள்ள பெருமாளே.
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 905 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போலவும், உள்ள, தனனாத், தனதன, வயலூர், நிறைந்த, குடலை, பெருமாளே