பாடல் 897 - கந்தனூர் - திருப்புகழ்

ராகம் - பூர்விகல்யாணி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தகிட-1 1/2, தக-1
தந்தனா தத்தனா தந்தனா தத்தனா தந்தனா தத்தனா ...... தந்ததான |
விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு மிஞ்சநீ விட்டவடி ...... வங்களாலே வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி வந்துதா இக்கணமெ ...... யென்றுகூற மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி வந்துசே யைத்தழுவல் ...... சிந்தியாதோ அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு மங்கிபார் வைப்பறையர் ...... மங்கிமாள அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ் அண்டரே றக்கிருபை ...... கொண்டபாலா எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர் எந்தைபா கத்துறையு ...... மந்தமாது எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ் எந்தைபூ சித்துமகிழ் ...... தம்பிரானே. |
சுக்கில விந்து வெவ்வேறான உருவங்களாய் எல்லாத் திசைகளிலும், ஒளிவாய்ந்த அசையும் அசையாப் பொருள் என்ற கூட்டமாய் இவ்வுலகில் தோன்றி காலம் கழித்து, பின்பு பிரிந்து போய் உடலை விடுவதை என் மனம் ஆராய்ந்து அறியும். இவ்வாறு மிகுதியாக நீ எனக்கு அளித்த வடிவங்களில் பிறப்பெடுத்து நான் வந்து நாயினும் கீழ்ப்பட்டவனாக மனம் நொந்து, ஞான நிலையை இந்தக் கணத்திலேயே வந்து கொடு என்று உன்னிடம் முறையிடுகிறேன். குழந்தைகள் தாவி நின்று புகழ்ந்தால் தாயும் தந்தையும் அம்மொழிகளைக் கேட்டு மனம் உருகி அக்குழந்தைகளை ஓடிவந்து தழுவிக்கொள்ளும் பான்மையை உன் மனம் சற்று நினைக்கக் கூடாதா? பேரிருளில் இடி இடிப்பதுபோல் வாய்விட்டுக் கூச்சலிட்டு வருகின்ற, கண்களில் நெருப்புப் பொறி பறக்கும் இழிகுலத்தரான அசுரர் ஒடுங்கி மாண்டுபோக, அழகிய கையிலிருக்கும் வேலைச் செலுத்தி அருளி, இந்திர லோகத்தில் மகிழ்ச்சியுடன் தேவர்கள் மீண்டும் குடியேற அருள்புரிந்த குமரனே, என் உயிருக்கு உதவி புரிந்தவரும்*, சந்திரனைச் சேர்த்து வைத்துள்ள ஜடையை உடையவரும், என் தந்தையும் ஆகிய சிவபெருமானும், அவரின் இடது பாகத்தில் அமர்ந்துள்ள அழகிய பார்வதிதேவி ஆகிய இருவரும் எங்கும் நிறைந்து விளங்கும் ஒப்பற்ற கந்தனூரில்**, பராசக்தி புகழும் எந்தை பரமசிவன் பூஜித்து மகிழும் தம்பிரானே.
* அருணகிரியாரின் வாழ்வில் அருணாசலேஸ்வரரே அவர் முன்பு தரிசனம் தந்து திருநீறு அளித்து ஆட்கொண்ட நிகழ்ச்சியைக் குறிப்பது.
** கந்தனூர் புதுக்கோட்டைக்குத் தெற்கே 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 897 - கந்தனூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மனம், தத்தனா, தந்தனா, அழகிய, ஆகிய, தந்தையும், வந்து, கந்தனூர், தம்பிரானே