பாடல் 874 - கூந்தலூர் - திருப்புகழ்

ராகம் - லதாங்கி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதிமி தகதிமி-4, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன ...... தனதான |
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை வெறியனை நிறைபொறை வேண்டி டாமத சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி தவநெறி தனைவிடு தாண்டு காலியை யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய் சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை விரைசெறி குழலியர் வீம்பு நாரியர் மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர் விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே ஒருபது சிரமிசை போந்த ராவண னிருபது புயமுட னேந்து மேதியு மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே உனதடி யவர்புக ழாய்ந்த நூலின ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர் உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு களமிசை யறமது தீர்ந்த சூரர்கள் குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு மிடறினி லிருவென ஏந்து மீசுரர் குருபர னெனவரு கூந்த லூருறை ...... பெருமாளே. |
இந்தப் புவியில் பல தீய வழிகளில் ஈடுபடும் மூடனான என்னை, குடிவெறி கொண்ட பித்தனை, நற்குணமும், பொறுமையும் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லாத, செருக்கு மிகுந்த அறிவற்றவனை, ஒருவித பெருமையும் இல்லாத தாழ்நிலையில் இருக்கும் வீணனை, நிரம்பின கேள்வி, தவ வழி இவற்றை விட்டுத் தாண்டி கண்ட வழியில் திரிகின்ற கெட்டவனை, பயனற்ற புத்தியால் கேடுகளும் தீமைகளும் செய்யும் குணம்கெட்டவனை, வேண்டுமென்றே இனநீக்கம் செய்யப்பட்ட கதியற்றவனை, நறுமணம் கமழும் கூந்தலை உடையவர், பிடிவாதம் உள்ள பெண்கள், சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர், விருப்பத்தைத் தூண்டும் காம மயக்கியர், கண் என்னும் வலையை வீசும் மகளிர் - இத்தகையோருடன் அவ்வப்போது கூடிய தொழிலை உடையவனாகிய என்னை, நிரம்ப மலர்கள் கொண்டு விரும்பிப் பூஜித்தாகிலும், ஒரு பூவோ ஓர் இலையோ கொண்டாகிலும் நான் உன்னை நினைத்து, நல்ல வகையில் அன்போடு கீழே விழுந்து உனது திருவடிகளைத் தொழுமாறு அருள்வாயாக. பத்துத் தலைகளோடு போர் செய்ய வந்த ராவணனுடைய இருபது தோள்களும், ஏந்திய வாள் ஆயுதமும் ஒரே பாணத்தால் அற்று விழும்படி அம்பு செலுத்திய ராமனாம் மாயத் திருமாலின் மருகனே, உன்னுடைய அடியார்களின் புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும், தேவர்களும், முநிவர்களும், கொடைகள் செய்து பாலிப்பவர்களும், உயர்ந்த நற்கதியைப் பெற, அருள் விளங்கும் அழகிய மயிலில் அமர்ந்திருப்பவனே, ஒலிக்கின்ற தண்டையணிந்த உன்னடியைத் தாழ்மையோடு கும்பிடாமல், போர்க்களத்தில் தர்ம நெறியைக் கைவிட்ட அசுரர்களின் குல முழுமையும் யாவருமாக மாண்டு போய்ப் பொடியாகும்படிக் கோபித்தவனே, ஆலகால விஷத்தைக் கொடு என்று கூறி வாங்கியே, அழகிய கழுத்திலேயே இரு என்று அதை கண்டத்தில் தாங்கும் சிவபிரானுக்கு சிவ பெருமானின் குருமூர்த்தியாக வந்தவனே, கூந்தலூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* கூந்தலூர் கும்பகோணத்துக்கு தென் கிழக்கே 7 மைலில், அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 874 - கூந்தலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தகதிமி, தானன, தாந்த, என்னும், அழகிய, இல்லாத, தென், கூடிய, வேண்டி, பெருமாளே, என்னை