பாடல் 854 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்ததன தந்ததன தனதனத் தந்ததன தந்ததன தனதனத் தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான |
கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க் கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற் கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் ...... கொடுபோய்வண் கெந்தபொடி யும்புனைந் துறவணைத் தின்பவச னந்தருந் தொழிலடுக் கின்றமய லின்படுந் துயரறப் ...... ப்ரபைவீசுந் தண்டைகள்க லின்கலின் கலினெனக் கிண்கிணிகி ணின்கிணின் கிணினெனத் தண்கொலுசு டன்சிலம் பசையவுட் ...... பரிவாகிச் சந்ததமும் வந்திரும் பரிமளப் பங்கயப தங்களென் கொடுவினைச் சஞ்சலம லங்கெடும் படியருட் ...... புரிவாயே தொண்டர்கள்ச ரண்சரண் சரணெனக் கொம்புகள்கு குங்குகுங் குகுமெனத் துந்துமிதி மிந்திமிந் திமினெனக் ...... குறுமோசை சுந்தரிம ணஞ்செயுஞ் சவுரியக் கந்தகுற வஞ்சிதங் கருவனத் துங்கமலை யும்புரந் தமரருக் ...... கிடர்கூரும் பண்டர்கள்பு யங்களும் பொடிபடக் கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற் பைந்தருவ னம்புரந் தகழெயிற் ...... புடைசூழும் பந்திவரு மந்திசெண் பகமகிற் சந்துசெறி கொன்றைதுன் றியவனப் பந்தணையில் வந்திடுஞ் சரவணப் ...... பெருமாளே. |
கெண்டை மீனைப் போன்ற கண்களை உடைய விலைமாதர்கள் மலர் அணிந்த கொண்டைகள் குலுங்கும்படியாக நின்று, சமீபத்திலிருந்து தாழ்ந்த குரலுடன், பற்கள் தெரியும்படி குழைந்து சிரித்துப் பேசி, (நாடி வருபவரை) படுக்கையில் கொண்டு போய், நல்ல வாசனைத் தூள்களைப் பூசி, இறுக்க அணைத்து, இன்பகரமான பேச்சுக்களுடன் கூடிய செயல்களால் உண்டாகின்ற காம மயக்கில் படுகின்ற துன்பம் நீங்க, ஒளி வீசுகின்ற (உனது) காலில் அணிந்த தண்டைகள் கலின் கலின் என்று ஒலி செய்ய, கிண்கிணி கிணின் கிணின் என்று ஒலி செய்ய, அருள் பாலிக்கும் கொலுசுடன், சிலம்பும் அசைய, திருவுள்ளத்தில் அன்பு கூர்ந்து எப்போதும் (என்முன்) வந்து, பெருமை தங்கிய, நறு மணம் உள்ள தாமரை போன்ற திருவடிகள் என்னுடைய பொல்லாத வினை, மனக் கவலை, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் (இவை யாவும்) அழிந்து போகும்படி அருள் புரிவாயாக. அடியார்கள் அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம் என்று வணங்க, ஊது கொம்புகள் குகுங் குகுங் குகும் என்று ஒலி செய்ய, பேரிகை திமிந் திமிந் திமின் என்று அணுகி ஓசை செய்ய, அழகிய தேவயானையைத் திருமணம் செய்த வல்லமை வாய்ந்த கந்தனே, குறப் பெண்ணாகிய வள்ளி தங்கியிருந்த அருமையான தினைக் காடு உள்ள பரிசுத்தமான வள்ளி மலையையும் காத்து, தேவர்களுக்குத் துன்பத்தை மிகவும் விளைவித்த மிண்டர்கள் (அசுரர்கள்) தோள்களும் அறுபட்டுத் தூளாகச் செய்தவனே. மிகச் சிறப்பு வாய்ந்த தேவயானை (வளர்ந்த) அழகிய பசுமை வாய்ந்த கற்பக மரக் காடுகள் உள்ள தேவலோகத்தைக் காத்தளித்து, அகழியும், மதிலும், பக்கத்தில் சூழ்ந்துள்ள, வரிசையாய் வரும் குரங்குகள் நிறைந்த, செண்பகம், அகில், சந்தனம், நெருங்கிய கொன்றை (இம் மரங்கள் எல்லாம்) பொருந்திய சோலை சூழ்ந்த திருப்பந்தணைநல்லூரில்* வீற்றிருக்கும் சரவணப் பெருமாளே.
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 854 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்ததன, செய்ய, அடைக்கலம், வாய்ந்த, உள்ள, தனதனத், குகுங், அழகிய, வள்ளி, திமிந், கிணின், சரவணப், பெருமாளே, அணிந்த, கலின், அருள்