பாடல் 845 - திருப்பெருந்துறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான |
முகர வண்டெழுங் கருமுகி லலையவு முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு ...... மமுதூறும் முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு மருவு சங்கநின் றொலிகொடு பதறவு முழுது மன்புதந் தமளியி னுதவிய ...... அநுராகச் சிகர கும்பகுங் குமபுள கிததன மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட ...... னுறமேவித் திமிர கங்குலின் புதவிடு மவசர நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் ...... புரிவாயே மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல் மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது ...... புயவீரன் மடிய வங்குசென் றவனொரு பதுமுடி முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல் மதிலி லங்கையும் பொடிபட அருளரி ...... மருகோனே நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு ...... மிளையோனே நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர் பவள மும்பொரும் பழனமு மழகுற நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே. |
ஒலி செய்யும் வண்டுகள் எழுந்து மொய்க்கும் கரிய மேகம் போன்ற கூந்தல் அலைச்சல் உறவும், முற்றிய விஷத்தைக் கக்கும் அம்பு போன்ற கண்கள் குவியவும், அரும்பு மலரும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியில் வியர்வை எழவும், அமுதம் ஊறுகின்ற, நறுமணம் தங்கும் செவ்விய பவளம் போன்ற வாயிதழ் தெரியவும், பொருந்திய சங்கு போன்ற கழுத்திலிருந்து வெளிப்படும் (புட்குரல்) ஒலியோடு பதறிடவும், முழு அன்பையும் தந்து படுக்கையில் காட்டிய காமப் பற்றுக்கு இடமானதும், மலை போன்றதும், குடம் போன்றதும், குங்குமம் பூசியதும், புளகிதம் கொண்டதுமான மார்பகங்கள் இரண்டு புயங்களிலும் அழுந்திடவும், மத்தியில் வெளியிடம் தெரியாத வண்ணம் ஒருவரை ஒருவர் அணைந்திட, உயிரும் உயிரும் கலந்து பொருந்தக் கூடி, இருண்ட இரவில் கலவி இன்பத்தைத் தந்து உதவிடும் சமயங்களின் ஞாபகம் மனதிலிருந்து ஒழிந்து போகவும், (அந்த விலைமாதர்களின்) முகத்தை தரிசனம் செய்ய விரும்பும் ஆசை ஒழிந்து போகவும் இனி எனக்கு அருள் புரிவாயாக. மகர மீன்கள் உள்ள, தெள்ளிய அலைகள் மோதும், ஒலிக்கும் கடல் (சமுத்திரராஜன்) கலக்கத்துடன் பயந்து வந்து திருவடியில் தொழுது வணங்கும்படி ஒரு கூர்மையான செவ்விய அம்பைச் செலுத்தியவனும், இருபது புயங்களைக் கொண்ட வீரன் (ராவணன்) இறக்க, இலங்கைக்குப் போய் அவனுடைய ஒரு பத்து தலைகளும் அழிபட முன்பு நெருங்கி போரைச் செய்த, ஒளி பொருந்திய மதில் சூழ்ந்த இலங்கைப் பட்டினம் பொடிபட அருளிய திருமாலின் மருகனே, ஒப்பில்லாத அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்ளவும் சாமர்த்தியத்துடன் ஏறி நின்று அழகு பொருந்திய மயிலில் மனோ வேகத்தைக் காட்டிலும் அதி வேகமாகச் செலுத்தி, அழகிய பூலோகத்தை வலம் வந்த இளையோனே, நிலவொளி போல் வெள்ளொளி வீசும் குளிர்ந்த முத்துக்களும் விளங்கி, ஒளி தரும் பவளமும் கலந்து இலங்கும் வயல்கள் அழகு தர, நிழல் தரும் குருந்த மரமும் நிறைந்த திருப் பெருந்துறையில்* விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே.
* திருப் பெருந்துறை அறந்தாங்கி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது. இங்குள்ள குருந்தமரத்தடியில்தான் மாணிக்கவாசகரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 845 - திருப்பெருந்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்தனந், பொருந்திய, அழகு, போகவும், விளங்கி, திருப், தரும், ஒழிந்து, போன்றதும், பெருமாளே, பொடிபட, செவ்விய, தந்து, உயிரும், கலந்து