பாடல் 844 - திருப்பெருந்துறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்தனந் தனதன தனத்தனந் தனதன தனத்தனந் தனதன ...... தனதான |
வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன மகிழ்ச்சிகொண் டிடஅதி ...... விதமான வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன் மயக்கவந் ததிலறி ...... வழியாத கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர களிப்புடன் களிதரு ...... மடமாதர் கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி களைத்தருந் திருவுள ...... மினியாமோ பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு புகைப்பரந் தெரியெழ ...... விடும்வேலா புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி பொறுத்தமந் தரகிரி ...... கடலூடே திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக திருட்டியெண் கணன்முத ...... லடிபேணத் திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு திருப்பெருந் துறையுறை ...... பெருமாளே. |
சந்தனக் கலவை பூசப்பட்டதும், குங்குமம் அணிந்ததும் ஆகி, தென்னங் குரும்பை ஒத்ததுமான மார்பை உடைய பெண்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளுமாறு, பலவகையான வளையல் அணிந்துள்ள தமது கரங்களால் (ஆடவர்களை) வசீகரித்து இழுத்து, வந்தவர்கள் உடல் இன்பம் அடையுமாறு காம மயக்கத்தை ஊட்டும் சொற்களால் அறிவு அழிந்து போகாத என் சிந்தனைகளும் அழிவு பெற, இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் புரள மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற இள வயதுள்ள மாதர்களால் ஏற்படுகின்ற பிறவி என்கின்ற கடலைக் கடக்க, உன் திருவடிகளைத் தருவதற்கு உன் திருவுள்ளம் இனியேனும் கூடுமோ? கிரெளஞ்ச மலையின் உள்ளிடம் பாடிபடவும், அசுரர்கள் தங்கள் ஊர்களுடன் புகை பரந்த நெருப்பில் பட்டு அழியவும் செலுத்திய வேலனே, புகழ் மிகுந்த தேவர்கள் மகிழும்படி, பூமியைத் தாங்கும் மந்தர மலையை பாற்கடலினிடையே (மத்தாகச்) சுழலச் செய்த மேக நிறத் திருமாலும், ஒரு குறையைப்* பெற்ற, (தனக்கிருந்த ஐந்து தலைகளில்) நான்கு முகங்களில் மட்டுமே பார்வையைக் கொண்ட எட்டுக் கண்களை உடைய பிரமன் முதலான தேவர்களும் உன் திருவடிகளை விரும்பிப் போற்ற, திருக் குருந்த மரத்து அடியில் வீற்றருளிய தக்ஷிணா மூர்த்தியாகிய குருபரர்** சங்கரருடன் திருப்பெருந்துறையில்*** அமர்ந்திருக்கும் பெருமாளே.
* இறைவனிடம் பொய் பேசியதால் பிரமனின் ஐந்து தலைகளுள் ஒரு தலை கிள்ளப்பட்டுள்ள மறு.
** மாணிக்க வாசகர் அமைச்சராக இருந்த சமயம் நாட்டுக்காக குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவபெருமான் ஞான குருமூர்த்தியாக இருந்து, குருந்த மரத்தடியில் அடியார்களுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுத் தாமும் கவரப்பட்டு, அந்த அடியார்களுடன் இருந்து உபதேசம் பெற்றார்.
*** திருப்பெருந்துறை அறந்தாங்கி ரயில் நிலையத்திலிருந்து 7 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 844 - திருப்பெருந்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தனந், தனதன, இருந்து, உபதேசம், குருந்த, உடைய, பெருமாளே, ஐந்து