பாடல் 84 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி;
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தந்த தனன தந்த தனன தந்த தனன ...... தனதான |
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற ...... வுடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய ...... விழஆவி வெங்கண் மறலி தன்கை மருவ வெம்பி யிடறு ...... மொருபாச விஞ்சை விளைவு மன்று னடிமை வென்றி யடிகள் ...... தொழவாராய் சிங்க முழுவை தங்கு மடவி சென்று மறமி ...... னுடன்வாழ்வாய் சிந்தை மகிழ அன்பர் புகழு செந்தி லுறையு ...... முருகோனே எங்கு மிலகு திங்கள் கமல மென்று புகலு ...... முகமாதர் இன்பம் விளைய அன்பி னணையு மென்று மிளைய ...... பெருமாளே. |
மனைவியும், மக்களும், தங்கள் சுற்றத்தார்களும், வந்து கதறி அழுது புலம்ப, உடம்பானது மயானத்தீயில் ஜ்வாலையுடன் எரிந்துகொண்டிருக்க, உறவினர் மயானத்தை விட்டு நீங்கி, பந்தம் என்ற மாயை நீங்குமாறு, நீரில் மூழ்கிக் குளிக்க, உயிரானது கொடுங்கண்களை உடைய யமனது கரத்தில் சிக்கிக்கொள்ள, மனம் புழுங்கித் துன்பப்படும் ஒரு பற்று என்னும் மாயக்கூத்து நிகழும் அந்த நாளில் உன் அடிமையாகிய சிறியேன் வெற்றி பொருந்திய உன் திருவடி மலர்களைத் தொழும்படி வந்தருள்வாயாக. சிங்கங்களும், புலிகளும் வாழும் காட்டிலே சென்று வேடப் பெண்ணாகிய வள்ளியுடன் வாழ்கின்றவனே, உள்ள மகிழ்ச்சியுடன் உன் அன்பர்கள் துதி செய்கிற திருச்செந்தூர் நகரில் எழுந்தருளிய முருகக் கடவுளே, எங்கும் விளங்கும் சந்திரனையும், தாமரையையும் ஒத்தது என்று உவமை கூறி புலவர்கள் புகழ்கின்ற திருமுகத்தை உடைய மாதர்களாம் தேவயானையையும், வள்ளியையும், உயிர்களுக்கு இன்பம் விளையுமாறு அன்போடு அணையும் எக்காலத்தும் இளமையோடு விளங்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 84 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, பெருமாளே, உடைய, விளங்கும், இன்பம், மென்று, தங்கள், வந்து, சென்று