பாடல் 834 - எட்டிகுடி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தன தத்தன தானா தானா தத்தன தத்தன தானா தானா தத்தன தத்தன தானா தானா ...... தனதான |
மைக்குழ லொத்தவை நீலோ மாலோ அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ வத்திர மெய்ச்சசி தானோ நாணா குத்துமு லைக்கிள நீரோ மேரோ வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ...... வெனமாதர் தக்கவு றுப்பினுள் மாலே மேலாய் லச்சைய றப்புணர் வாதே காதே சைச்சையெ னத்திரி நாயே னோயா ...... தலையாதே தற்பொறி வைத்தருள் பாராய் தாராய் தற்சமை யத்தக லாவே னாதா தத்தும யிற்பரி மீதே நீதான் ...... வருவாயே முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோளார் மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் ...... மருகோனே முத்தமிழ் வித்வவி நோதா கீதா மற்றவ ரொப்பில ரூபா தீபா முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ...... முருகோனே இக்குநி ரைத்தவி ராலூர் சேலூர் செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர் மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் ...... வயலூரா எச்சுரு திக்குளு நீயே தாயே சுத்தவி றற்றிறல் வீரா தீரா எட்டிகு டிப்பதி வேலா மேலோர் ...... பெருமாளே. |
கரிய கூந்தலுக்கு ஒப்பானவை கருங் குவளையோ, கருமையோ? அந்தக் கண்கள் இரண்டுக்கும் ஒப்பானவை சேல் மீன்களோ, வேலோ? பின்னர் அந்தப் பெண்களின் சொல்லுக்கு இணை தெளிந்த பாலோ, வெல்லமோ, வடித்த தேனோ? முகம் உண்மையாகவே சந்திரன் தானோ? வெட்குதல் இல்லாமல் எழுந்த குத்தும் மார்பகத்துக்கு ஒப்பானவை இளநீரோ, மேரு மலையோ? இடைக்கு இணையாகக் கூறப்படுவது (நுண்ணியதான) நூலோ, அதை விட மேலானது ஒன்றோ என்றெல்லாம் மாதர்களுடைய மனத்தைக் கவர வல்ல அவயவங்களுள் காம மயக்கம் மிக்கவனாய், கூச்சம் இல்லாமல் சேர்கின்ற போட்டிச் சண்டையில் நுழையாமல், சீச் சீ என்று (பிறர் சொல்லும்படி) திரிகின்ற நாயேன் எப்போதும் அலையாமல், உனது முத்திரையை (வேல்-மயில் அடையாளத்தை) என் மேல் பொறித்து வைத்து கண் பார்த்து அருளுக. சிவசமயத்தனே, ஒளி வேல் ஏந்தும் நாதனே, (குதிரை போலத்) தாவிச் செல்லும் மயில் வாகனத்தின் மேல் நீதான் வந்து அருள வேண்டும். மூன்று கண்களை உடைய சிவபெருமான் மெச்சிப் புகழும் பாலனே, தூயவனே, மன்மதனின் மைத்துனனான செவ்வேளே, தோள்கள் நிரம்ப மொய்த்துள்ள, நறுமணம் உள்ள, துளசி மாலை அணிந்தவனாகிய திருமாலின் மருகனே, முத்தமிழ்ப் புலமை வாய்ந்த விநோதனே, இசை ஞானியே, பிறர் எவரும் உனக்கு ஒப்பில்லாத உருவத்தனே, (ஞான) ஒளி விளக்கே, முக்தியைத் தந்தருளி அடியார்கள் மீது மிக்க ஆசை கொள்ளும் முருகனே, கரும்பு வரிசையாக உள்ள விராலியூர், சேல் மீன்கள் நீந்தி ஊடுருவும் வயல்கள் உள்ள பழனி ஊரனே, திருவாரூர், சிறப்பு வாய்ந்த திருவிடைக்கழி, புள்ளிருக்கும் வேளூர் (ஆகிய வைதீஸ்வரன் கோவில்), பூ அரும்புகள் அடர்ந்து நிறைந்துள்ள வயலூர் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, எத்தகைய வேதத்துக்குள்ளும் நீயே தாய் போல் மூலப் பொருளாய் நிற்கின்றவனே, பரிசுத்தமான வலிமையும், திறமையும் வாய்ந்த வீரனே, தீரனே, எட்டிகுடியில்* வீற்றிருக்கும் வேலனே, தேவர்களின் பெருமாளே.
* நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 834 - எட்டிகுடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானா, ஒப்பானவை, உள்ள, வாய்ந்த, இல்லாமல், பிறர், மயில், மேல், சேல், வேல், பெருமாளே, பாலோ, வேலோ, தானோ, நூலோ, வேளூர், நீதான், நீயே