பாடல் 821 - திருவாருர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
கரமு முளரியின் மலர்முக மதிகுழல் கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே கருதி யனநடை கொடியிடை யியல்மயில் கமழு மகிலுட னிளகிய ம்ருகமத களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும் இரவு பகலற இகலற மலமற இயலு மயலற விழியினி ரிழிவர இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே யெழுத அரியவள் குறமக ளிருதன கிரியில் முழுகின இளையவ னெனுமுரை யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே சுரபி மகவினை யெழு¦பொருள் வினவிட மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது துணிவி லிதுபிழை பெரிதென வருமநு உருகி யரகர சிவசிவ பெறுமதொர் சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப் பரவி யதனது துயர்கொடு நடவிய பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப் படியு லறுமுக சிவசுத கணபதி யிளைய குமரநி ருபபதி சரவண பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே. |
கைகள் தாமரையின் மலரையும், முகம் சந்திரனையும், கூந்தல் மேகத்தையும், மதிக்கத் தக்க சொற்கள் பழத்தையும், ஒளி பொருந்திய பற்கள் முல்லை மலரையும், போரை விளைவிக்கும் கண்கள் கடல் என்னும்படியும் நஞ்சையும் ஒக்கும் என்றும் மனதுக்குள்ளே எண்ணி, அன்னப் பறவையைப் போன்ற நடை, கொடி போன்ற இடை, மயில் போன்ற இயல்பு, நறு மணம் வீசும் அகிலுடன் இழைந்துள்ள கஸ்தூரிக் கலவை, மகிழ்ச்சி தரும் மலை போன்ற மார்பகம் இவற்றையுடைய விலைமகளிர் மீது மோகம் கொண்டு திரிகின்ற நானும், இரவு பகல் என்ற வித்தியாசம் இல்லாதவாறு, பகையான எண்ணம் அற, (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும் மலங்கள் அற, பொருந்துகின்ற ஆசைகள் அற, கண்களில் கண்ணீர் ஒழுக, உள்ளம் உருகி பாகு வெல்லம் போன்ற பதத்தை நிலையாகப் பொருந்த, எழுதுவதற்கு முடியாத குற மகளாகிய வள்ளி நாயகியின் இரண்டு மார்பகங்களாகிய மலைகளில் முழுகிய இளையவனே என்கின்ற சொல்லானது எனக்கு இன்பம் தருவதும், நான் உனது இரண்டு திருவடிகளைச் சேர்வதுமான ஒரு நாள் வருமோ? பசு இறந்த தனது கன்றை எழுப்புதற்கு வழியை ஆராய்ந்து நாடி மனு நீதிச் சோழனின் ஆராய்ச்சி மணியைச் சென்று அசைத்து ஆட்ட, அந்த மணியின் ஒலி மிக்க துயரை விளைவித்து அரசனின் காதுகளில் ஒலிக்க, மிகவும் கொடிய செயல் ஏதோ நடந்திருக்கின்றது, போய் விசாரிக்கவும் என்று அவர் சொல்ல, நிச்சயமாக இது பெரிய தவறாகும் என்று எழுந்து வந்த மன்னனாகிய மநு மனம் கசிந்து, அரகர சிவசிவ என்ற வார்த்தைகள் வரச் செய்த ஒரு பசு வேதனைப்பட்டு கண்ணீர் பெருகுதலைப் பார்த்து, நடு நிலைமையை அறிந்து இறைவனைத் தியானித்து, அந்தப் பசுவுக்கு துயரத்தைத் தரும்படியாக ரதத்தை ஓட்டிய குற்றத்துக்கு ஆளான தன் மகனை உடல் இரண்டு பிளவாகும்படி, அவன் மேல் படியுமாறு ரதத்தை நடத்தும்படி சொன்னவனாகிய மநு நீதிச் சோழன் ஆட்சி செய்த திருவாரூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஆறு முகனே, சிவபெருமானின் மகனே, விநாயகப் பெருமானின் தம்பியே, குமரனே, அரசர்கள் தலைவனே, சரவணப் பெருமாளே, கடல் முறை இடும்படி வேல் கொண்டு செலுத்திய பெருமாளே.
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 11 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 821 - திருவாருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, இரண்டு, பெருமாளே, கண்ணீர், நீதிச், ரதத்தை, செய்த, கொண்டு, மலரையும், சுரபி, இரவு, உருகி, சிவசிவ, நடவிய, கடல்