பாடல் 812 - திருவாஞ்சியம் - திருப்புகழ்

ராகம் -
காம்போதி
தாளம் - அங்கதாளம் - 6
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2
தாளம் - அங்கதாளம் - 6
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2
தனதாந்த தத்த தனதன தனதாந்த தத்த தனதன தனதாந்த தத்த தனதன ...... தனதான |
இபமாந்தர் சக்ர பதிசெறி படையாண்டு சக்ர வரிசைக ளிடவாழ்ந்து திக்கு விசயம ...... ணரசாகி இறுமாந்து வட்ட வணைமிசை விரிசார்ந்து வெற்றி மலர்தொடை யெழிலார்ந்த பட்டி வகைபரி ...... மளலேபந் தபனாங்க ரத்ந வணிகல னிவைசேர்ந்த விச்சு வடிவது தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு ...... வியபோது தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு பிடிசாம்பல் பட்ட தறிகிலர் தனவாஞ்சை மிக்கு னடிதொழ ...... நினையாரே உபசாந்த சித்த குருகுல பவபாண்ட வர்க்கு வரதன்மை யுருவோன்ப்ர சித்த நெடியவன் ...... ரிஷிகேசன் உலகீன்ற பச்சை யுமையணன் வடவேங்க டத்தி லுறைபவ னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே த்ரிபுராந்த கற்கு வரசுத ரதிகாந்தன் மைத்து னமுருக திறல்பூண்ட சுப்ர மணியஷண் ......முகவேலா திரைபாய்ந்த பத்ம தடவய லியில்வேந்த முத்தி யருள்தரு திருவாஞ்சி யத்தி லமரர்கள் ...... பெருமாளே. |
யானைப் படை, காலாட் படை முதலிய படைகளையுடைய சக்ரவர்த்தியாகி, நிறைந்துள்ள நால்வகைச் சேனைகளையும் ஆண்டுகொண்டு, ஆக்ஞாசக்கரம் தன் வேலை முறைகளை நடத்த அவ்வாறே வாழ்ந்து, திக்குவிஜயம் செய்து, இந்தப் புவிக்கு மன்னனாகி மிக்க பெருமை அடைந்து, வட்ட வடிவான திண்டுமெத்தை மேலுள்ள விரிப்பில் சாய்ந்து, வெற்றி வாகையான மலர் மாலைகளும், அழகு மிகுந்த ஆடைகளும், நறுமணக் கலவைப் பூச்சுக்களும், சூரிய ஒளியைத் தன்னிடத்தில் கொண்ட ரத்தினங்களாலான ஆபரணங்களும், இவையெல்லாம் சேர்ந்தாலும் ஒரு மனித வித்துவின் வடிவம்தான் இவ்வுடல். தம் உறவினர்கள் சூழ்ந்திருக்க, இந்த உடலினின்றும் பெருமைமிக்க உயிர் பிரிந்து போகும் தருணம், அந்த நெருப்பு உடலைக் கொளுத்திவிட, முடிவில் அவ்வுடல் ஒரு பிடி சாம்பல் என்ற நிலையை அடைவதை யாரும் அறியார். பொருளாசை மிகுந்து, உன் திருவடிகளைத் தொழ நினைப்பதில்லை. மனச்சாந்தி உடையவர்களும், குரு வம்சத்தைச் சேர்ந்தவர்களுமான பஞ்சபாண்டவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்தவனும், கருமேக நிறத்தவனும், கீர்த்திமானும், விஸ்வரூபனும், இந்திரியங்களை வென்றவனும், லோகமாதாவாகிய பச்சைநிற உமாதேவியின் அண்ணனும், வடவேங்கடம் என்னும் திருமலையில் வாழ்பவனும், உயர்ந்த சாரங்கம் என்ற வில்லையும், சுதர்சனம் என்ற சக்கரத்தையும் கரத்தில் ஏந்தும் திருமாலின் மருமகனே, திரிபுரங்களுக்கு யமனாய் இருந்த சிவனுக்கு சிரேஷ்டமான பிள்ளையே, ரதியின் கணவன் மன்மதனுக்கு மைத்துனன்* முறையான முருகனே, பராக்ரமம் வாய்ந்த சுப்பிரமணியனே, ஆறுமுகனே, வேலனே, அலைகள் பாயும் தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசனே, முக்தித்தலமாகிய** திருவாஞ்சியத்தில்*** வீற்றிருக்கும் தேவர்கள்தம் பெருமாளே.
* முருகன் திருமாலின் மருமகன். மன்மதன் திருமாலின் மகன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
** முக்தித்தலங்கள் பின்வருமாறு:தில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம், முல்லைவனம், மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருவாஞ்சியம்.
*** திருவாஞ்சியம் திருவாரூர் தலத்துக்கு வடமேற்கில் நன்னிலத்துக்கு மேற்கில் 7 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 812 - திருவாஞ்சியம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதாந்த, திருமாலின், சக்ர, தத்த, தனதன, முருகன், திருவாரூர், திருவாஞ்சியம், மிக்க, வட்ட, வெற்றி, சித்த, பெருமாளே