பாடல் 794 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் -
ஸெளராஷ்டிரம்
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தத்தனத் தனன தத்தனத் தனன தத்தனத் ...... தனதான |
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப் பயனு மெப்படிப் ...... பலவாழ்வும் பழைய முத்தியிற் பதமு நட்புறப் பரவு கற்பகத் ...... தருவாழ்வும் புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும் புலன கற்றிடப் பலவி தத்தினைப் புகழ்ப லத்தினைத் ...... தரவேணும் தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச் சரவ ணத்தினிற் ...... பயில்வோனே தனிவ னத்தினிற் புனம றத்தியைத் தழுவு பொற்புயத் ...... திருமார்பா சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத் திறல யிற்சுடர்க் ...... குமரேசா செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற் றிருவி டைக்கழிப் ...... பெருமாளே. |
புகழப்படுகின்ற முத்தமிழ் நூல்களின் பொருளையும், உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும், எத்தன்மைத்தான பலதரப்பட்ட வாழ்வையும், தொன்று தொட்டு வரும் முக்திச் செல்வ நிலையையும், யாவரும் விரும்பிப் போற்றும் கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும், குற்றமற்ற புத்தியுடன் ராஜயோகத்தைப் பெற்று விளங்கும் அற்புதமான சிறந்த வாழ்வையும், ஐம்புலச் சேஷ்டைகள் நீங்கப்பெற உன் பலவகைப் பெருமைகளைப் புகழும் அறிவுப் பலத்தையும் நாவன்மையையும் நீ தந்தருள வேண்டும். (தக்ஷயாகத்தில் நடைபெற்ற) சண்டையின்போது தகர்க்கப்பட்டு அறுந்துபோன கைகளைக் கொண்ட அக்கினிதேவனது கைத்தலங்கள் (முருகனின் ஆறு பொறிகளின் சூடு தாங்காமல்) கங்கையில் விட்டுவிட இணைந்திருக்கும் சரவணப் பொய்கையில் பொருந்தி வளர்ந்தவனே, தனியாக வள்ளிமலைக்காட்டில் தினைப்புனத்தைக் காத்த மறக்குலத்து வள்ளியை தழுவிய அழகு புயங்களையும் திருமார்பையும் உடையவனே, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலையைப் பிளந்து பகிர்ந்த ஞானமும் வலிமையும் வடிவான சுடர்வேலை உடைய குமரேசனே, செழிப்பான பூஞ்சோலைகளில் குராமரங்கள் உள்ள அழகிய திருவிடைக்கழியில்* மேவும் பெருமாளே.
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 794 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனத், கொண்ட, உள்ள, வாழ்வையும், பெருமாளே