பாடல் 795 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் - ரேவதி
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனனதன தத்தனத் தனனதன தத்தனத் தனனதன தத்தனத் ...... தனதான |
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப் பவமுறைய வத்தைமுக் ...... குணநீடு பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப் பசிபடுநி ணச்சடக் ...... குடில்பேணும் உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக் குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன் உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித் துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக் கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க் குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத் தடலனுச வித்தகத் ...... துறையோனே தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத் தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே. |
மண், நீர், தீ, வலிமை கொண்ட வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள், பொய், கருவிலே பிறப்பு கூடும் அவஸ்தை, ஸாத்வீகம், ராஜஸம், தாமதம் என்ற முக்குணங்கள், வெகு காலமாய்க் கூடிவரும் நோய்கள், மூளை, ஜீவதாது, ரத்தம், எலும்பு, உடலில் தோன்றும் பசி, உள்ளிருக்கும் மாமிசம் இவை யாவும் கூடிய அறிவற்ற சிறு குடிசையைப் பெரிதெனப் போற்றி இந்த தேகத்தைத் தாங்கி மிகக் கீழானதாகப் பெறப்பட்ட இந்தப் பிறவியிலே ஞானம் கலந்த சிந்தை இல்லாமல் நாயினும் கீழான நான்அலைந்து திரியும் தன்மை நீதி ஆகாது. வீரக் கழல் அணிந்த உன் திருவடிகளை எனக்கு அளித்து, உன்னை அண்டியுள்ள பழைய அடியார் கூட்டத்தில் என்னையும் ஒருசேர வைத்து அருள் புரிய வேண்டுகிறேன். கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான சேவலைக் கொடியாக உடையவனே, அழகான தினைப்புனத்து வள்ளிக் கொடி படரும் புயமலைகளை உடைய, ஒளி பொருந்திய வேலாயுதனே, குமரனே, போரில் சீறிப் பாயும் பாம்பை அணியும் தந்தை சிவபிரானின் மெய்ப் புதல்வனே, மூன்று தமிழிலும் மகிழும் வித்தகனே, விசேஷமான அழகிய மத்தகத்தோடு கூடிய பெரிய மலை போன்ற கணபதியின் தந்தை சிவபிரானுக்கு குருவே, அதே கணபதியின் பராக்ரமம் மிகுந்த தம்பியே, ஞான நிலையில் விளங்குபவனே, விருக்ஷங்கள் பொருந்தி விளங்கும் தலமும், பூமியின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் தன்னிடம் வந்து வேண்டினால் அவர்களுக்கு முத்தியைத் தரும் தலமுமாகிய திருவிடைக்கழித் தலத்தில் அமர்ந்த பெருமாளே.
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 795 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனதன, தத்தனத், தந்தை, கணபதியின், கூடிய, முத்தியைத், தகிட, பெருமாளே