பாடல் 79 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான |
பருத்தந்தத் தினைத்தந்திட் டிருக்குங்கச் சடர்த்துந்திப் பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் ...... தனமானார் பரிக்குந்துற் சரக்கொன்றத் திளைத்தங்குற் பலப்பண்பைப் பரக்குஞ்சக் கரத்தின்சத் ...... தியைநேரும் துரைச்செங்கட் கடைக்கொன்றிப் பெருத்தன்புற் றிளைத்தங்குத் துணிக்கும்புத் தியைச்சங்கித் ...... தறியேனைத் துணைச்செம்பொற் பதத்தின்புற் றெனக்கென்றப் பொருட்டங்கத் தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் ...... படியாள்வாய் தருத்தங்கப் பொலத்தண்டத் தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத் தடத்துன்பத் தினைத்தந்திட் ...... டெதிர்சூரன் சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக் கதிர்த்துங்கத் தயிற்கொண்டத் தலத்தும்பர்ப் பதிக்கன்புற் ...... றருள்வோனே திருக்கஞ்சத் தனைக்கண்டித் துறக்கங்குட் டிவிட்டுஞ்சற் சிவக்கன்றப் பொருட்கொஞ்சிப் ...... பகர்வோனே செயத்துங்கக் கொடைத்துங்கத் திருத்தங்கித் தரிக்கும்பொற் றிருச்செந்திற் பதிக்கந்தப் ...... பெருமாளே. |
பருத்த யானையின் தந்தத்தைப் போல் இருந்து, கச்சை மீறித் தள்ளி, பருத்து எழும், பொன் ஒளி கொண்ட மலை போன்ற மார்பகங்களை உடைய மாதர்களின், கொடுமையைத் தாங்கும் சரத்துக்கு (அம்புக்கு) ஒத்ததாக விளங்கி, அங்கு நீலோற்பல மலரின் அழகையும் தோற்க வைத்து, (திருமாலின்) சக்கரப் படை போலவும், (முருகனின்) சக்தி வேல் போலவும் வேகம் கொண்ட செவ்விய கடைக் கண்ணின் வலையில் வீழ்ந்து, பேரன்பு கொண்டு இளைத்து அங்கு அழிபடும் புத்தியைச் சந்தேகித்து அறியாத என்னை உனது இரண்டு செம்பொன் பாதங்களில் இன்புறச் செய்து, எனக்கு எப்போதும் அப்பெரும் பொருள் நிரம்பத் தங்கும்படி தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து இப்போதே ஆண்டு அருள்வாய். கற்பக மரங்கள் உள்ள அந்தப் பொன்னுலகத்தைக் கவர்ந்து, அந்தத் தேவர்கள் அஞ்சும்படி பெருந் துன்பங்களை அவர்களுக்குத் தந்து, போரில் உன்னை எதிர்த்து வந்த சூரன் போரில் தாழ்ந்து குறைவுபட்டு அழிய, ஒளியும் தூய்மையும் கொண்ட வேல் கொண்டு மடியச்செய்து, அந்த விண்ணுலக தேவர் தலைவனாகிய இந்திரனிடம் அன்புற்று அருள் புரிந்தவனே, அழகிய தாமரையில் இருக்கும் பிரமனை கண்டித்து, (ப்ரணவத்துக்கு பொருள் தெரியாததால்) அழுந்தும்படி குட்டி விட்டு, நல்ல சிவபிரானுக்கு அன்று அந்த மூலப் பொருளை அன்புடன் உபதேசித்தவனே, வெற்றித் தூய்மை, கொடைத் தூய்மை, செல்வம் ஆகியவை நிலை பெற்று விளங்கும் அழகிய திருச்செந்தூர்ப் பதியில் உள்ள கந்தப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 79 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந்தத், கொண்ட, உள்ள, தூய்மை, போரில், அந்த, தந்து, அழகிய, கொண்டு, பெருமாளே, தினைத்தந்திட், அங்கு, போலவும், வேல், பொருள்