பாடல் 78 - திருச்செந்தூர் - திருப்புகழ்
ராகம் - தேவகாந்தாரி
; தாளம் - சதுஸ்ர அட - 12
- எடுப்பு 1/2 இடம்
- எடுப்பு 1/2 இடம்
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா |
பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார் படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே. |
நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும் அழகிய மார்பினை உடைய பெண்களின், படைகளிலேயே மிகக் கொடிய யமபடைக்கு ஒப்பாக கடைக்கண்ணால் சந்திக்கின்ற பார்வையாலும், கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகாலும், மயங்கித் திரிகின்ற அடியேனை, இன்பத்துடனும், பிரியமாகவும் ஆட்கொண்டு அருள்வாயாக. திருமாலுக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே, கடம்ப மாலையை அணிந்துள்ள திருமார்பனே, அலைகள் குமுகுமுவென கொதித்துப் பொங்குமாறு கடலினைக் கோபித்து வேலினைச் செலுத்தியவனே*, முப்புரத்தை எரித்த சிவனார் கும்பிடும் உத்தம குருநாதா, வெற்றியை உடையவனே, பாவத்தை நீக்குபவனே, திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.
* இறுதிப் போரில் சூரன் மாமரமாகி கடலுள் ஒளிய, முருகன் கடல் மீது கோபமாக வேலினை விட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 78 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்தத், பெருமாளே, உடைய, குருநாதா, தனதானா, கந்தப்