பாடல் 788 - மாயூரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதன தத்தத் தனந்த தானன தனதன தத்தத் தனந்த தானன தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான |
அமுதினை மெத்தச் சொரிந்து மாவின தினியப ழத்தைப் பிழிந்து பானற வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ...... விதழாராய் அழகிய பொற்றட் டினொண்டு வேடையின் வருபசி யர்க்குற் றவன்பி னாலுண வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக் குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக் குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு மவர்மய லிற்புக் கழிந்த பாவியை குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன் மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே மறுவறு கற்பிற் சிறந்த சீதையை விதனம்வி ளைக்கக் குரங்கி னாலவன் வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே எமதும லத்தைக் களைந்து பாடென அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே. |
அமுதத்தை நிரம்ப ஊற்றி, மாமரத்தின் இனிப்பான பழத்தை அதனுடன் பிழிந்து, பாலும் அதனுடன் தேனையும் கலந்து கூட்டி, (அவையுடன்) தித்திக்கின்ற கற்கண்டையும் கலந்த அத்தனை சுவையுள்ள வாயிதழ் (ஊறலை) உடையவர்களாய், அழகான பொன் தட்டில் மொண்டு, காம நோயுடன் வருகின்ற மோகப் பசி உள்ளவர்கள் மேல் வைத்த அன்பினால் (அவர்கள்) உண்ணும்படி கொடுப்பவர்கள் போன்று இளைப்புள்ள காமிகளின் மோக மயக்கம் நீங்க, (அதரபானத்தால்) வாய் வெளுத்த வேசையர்களின், இடம் பரந்த நிலவொளி வீசும் முத்து மாலையை அணிந்த, பருத்து விளங்கும், அழகுடன் மிக்கெழுந்த, நிறைந்த பாரமான மார்பாம் மலை இளகும்படி அணைத்து, வயிற்றின் மேல் விழுகின்ற அந்த விலைமாதர்களின் மோக வலையில் பட்டு அழிந்த பாவியாகிய என்னை, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக. தன் குலத்தினர் பெருக, உலகம் எல்லாம் கலக்கமுற, மூர்க்கமும் கொடுமையும் நிறைந்த இழிவான புத்தியைக் கொண்டு அழிவு தரும் செயல்களைச் செய்து துன்பம் விளைவித்த ராவணன் சற்றும் பொருட்படுத்தாமல், குற்றம் அற்ற, கற்பில் மேம்பட்ட சீதைக்கு துக்கம் விளைவிக்க, குரங்குகளின் சேனையின் உதவியைக் கொண்டு அவனுடைய குலத்தை அறுத்து விளங்கும் (ராமனாம்) திருமாலின் மருகனே, என்னுடைய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களையும் நீக்கி, பாடுவாயாக என்று நீ எனக்குத் திருவருள் பாலிக்க, அதன் படியே உன்னைப் புகழ்ந்து உழுவலன்புடன் பாடிய பாடல்களை விரும்பி மேலான பேற்றினை எனக்கு அருளிய முருகனே, அழகிய சங்கு நிரம்பத் தவழ்ந்து உலாவுகின்ற காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் விளங்குகின்ற, ஒப்பு இல்லாத, ரத்தினமயமான மயிலாடு துறையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 788 - மாயூரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - புகழ்ந்து, தனதன, தானன, தனந்த, தத்தத், அதனுடன், மேல், நிறைந்த, கொண்டு, பெருமாளே, விளங்கும், அணிந்த, ராவணன், அழகிய, பிழிந்து, லாவிய, பற்றிப், பாடிய, தவழ்ந்து