பாடல் 787 - திருப்படிக்கரை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்த தத்தனத் தனத்த தத்தனத் தனத்த தத்தனத் ...... தனதான |
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட் டழைத்தி தப்தடச் ...... சிலகூறி அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த் தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத் துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க் குளக்க ருத்தினிற் ...... ப்ரமைகூரா துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித் துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற் றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச் சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற் றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர் செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச் செயித்த வுத்தமத் ...... திருமாமன் திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த் திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே. |
அருமை பாராட்டி அமைதியாகச் சிரித்து, மை பூசிய கண் கொண்டு அழைத்து, இன்பம் பெருகும்படி சில வார்த்தைகளைப் பேசி, இடுப்பினில் உள்ள பெண்குறிக்காக பணம் பெறும்பொருட்டு அதனை விற்பனை செய்து, கட்டியுள்ள பட்டாடையை அவிழ்த்து, அணைத்து, வாயிதழ் ஊறலைத் தந்து, காமலீலையில் உள்ளத்தை உருக வைத்து, குறைவிலா வகையில் பொருள் பறிக்கும் பொது மகளிரிடம் எனது உள்ளக் கருத்தில் மயக்கம் மிக்கு எழாது, செய்ப்பதி எனப்படும் வயலூர் என்ற தலத்தைப் போற்றி உரைத்து, உன்னைத் துதித்து, திருப்புகழ்ப் பாடல்களைச் சொல்வேனோ? பெருமை உள்ள குரங்குப் படையின் பலத்தினால் பெரிய மலைகளை எடுத்துப் போட்டு அணை கட்டி, கடலைக் குறுக்கே அடைத்து, (அணைக்கு) அப்பால் இருந்த அரக்கர்கள் பொடியாக, சண்டை மிக்கெழ, வீரம் உள்ள அம்பைச் செலுத்தி வீழ்த்தி வெற்றி கொண்ட மேலான அழகிய (ராமனாகிய) திருமாலும், சிறந்த தந்தையாகிய சிவபெருமானும் மெச்சுகின்ற ஒப்பற்றவனே. முத்தமிழ் வல்லானே, திருப்படிக்கரையில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* இந்தத் தலம் திருமண்ணிப் படிக்கரை எனவும், இலுப்பைப்பட்டு எனவும் வழங்கும். வைதீஸ்வரன்கோவிலுக்கு மேற்கே 6 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 787 - திருப்படிக்கரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, தத்தனத், உள்ள, எனவும், சிரித்து, பெருமாளே