பாடல் 777 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதனன தத்ததன தனதனன தத்ததன தனதனன தத்ததன ...... தனதான |
விடமெனமி குத்தவட வனலெனவு யர்த்துரவி விரிகதிரெ னப்பரவு ...... நிலவாலே விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு விரைதருவி தட்கமல ...... கணையாலே அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல் அழலொடுகொ தித்துவரு ...... கடைநாளில் அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற அவசமொட ணைத்தருள ...... வரவேணும் அடவிதனில் மிக்கபரு வரையவர ளித்ததிரு அனையமயில் முத்தமணி ...... சுரயானை அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி கருணையொட ளித்ததிற ...... முருகோனே கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி கழுமலந கர்க்குமர ...... பெருமாளே. |
விஷம் போலப் பொருந்திய, வடமுகாக்கினி என்று கூறும்படியாக, உச்சிப்பகலின் சூரியனது வெப்பம் மிகுந்த கதிர்கள் என்று சொல்லும்படியாக, தனது கிரணங்களைப் பரப்பும் சந்திரனால் துன்பம் மிக அடைந்தும், (அச்சமயத்தில்) வருகின்ற ரதியின் கணவனான மன்மதன் கோபித்துச் செலுத்துகின்ற, வாசனை தருகின்ற இதழ்களை உடைய தாமரை அம்பினால் வலியப் போரைச் செய்யும் சமயத்தில், என்னைச் சார்ந்து, மிக்க நெருப்புத் தணல் போல கொதிப்புடன் படுகின்ற கடைசி நாளில் (என்னை) நமன் அணுகித் தாக்க, நான் மயக்கம் கொள்ளும் அச்சமயத்தில், நீ மனம் வைத்து பரவசத்துடன் என்னை அணைத்து அருள வர வேண்டும். காட்டில் நிறைந்திருந்த பெருத்த மலைவாசிகளாகிய வேடர்கள் போற்றி வளர்த்த, லக்ஷ்மி போன்ற மயிலாகிய வள்ளி, முத்து மாலை அணிந்த தேவயானை (ஆகிய இருவர்களின்) அழகிய மணி மாலைகள் உள்ள குடம் போன்ற மார்பகங்களின் மேல் மோகம் கொள்ளும் மிகுந்த காதலனே, அழகிய மணிகள் புனைந்த மயில் வீரனே, மதமும் பெருமையும் பொருந்திய யானை முகவராகிய கணபதிக்குத் தம்பியே, இமய மலை அரசன் மகளான பார்வதி (தேவர்களின் மீது) கருணை கொண்டு அருளிய வலிமை மிக்க முருகனே, தாமரை மலரை ஒத்த கண்களை உடைய திருமாலின் மருகனே, அடியார்கள் பணிகின்ற சீகாழியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவி பாடுவது போல் பாடியது.சந்திரன், மன்மதன், மலர் அம்பு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 777 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, தனதனன, என்னும், தத்ததன, அழகிய, சீகாழி, சண்பை, கொள்ளும், மற்ற, முனிவர், மிக்க, மிகுந்த, பொருந்திய, பெருமாளே, அச்சமயத்தில், மன்மதன், தாமரை, உடைய, என்னை