பாடல் 774 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸநாதம்
தாளம் - அங்கதாளம் - 5 - திஸ்ர்ருபகம்
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 5 - திஸ்ர்ருபகம்
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தாந்த தான தனதன தாந்த தான தனதன தாந்த தான ...... தனதான |
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ் செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும் இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை புழுககில் சாந்து பூசி ...... யரசாகி இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக் கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே. |
சூரியன், சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்று சொல்லும்படியான பெருமையுடன், மதில் நீளமுடையதாக, மிகுந்த சூரிய ஒளியைப் பெற்றிருக்கும் மாளிகையில் முத்தாலும் அழகிய ரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் (அமர்ந்து) கீதம் நிரம்பிய பாடல்களைப் புகழ்ந்து பாடும் பாணர்கள் ஒன்றுகூடிப் பாடவும், இரண்டு பக்கங்களிலும் ஒரே மாதிரியான வளையல்களைப் பூண்ட கையை உடைய மாதர்கள் நின்று கவரி வீசவும், மாலைகளைச் சூடி, புனுகு, அகில், சந்தனம் இவற்றைப் பூசிக்கொண்டு, அரச பதவியில் இருந்து, இன்பமயமாக இறுமாப்புடனே வாழ்கின்ற, நல்வினை, தீவினை இரண்டிற்கும் கட்டுப்பட்ட இந்த சா£ரம் கடைசியில் ஒருபிடி சாம்பலாக மாறி அழிந்து போகலாமா? காட்டில் திரியும் வேடர்கள் அதிசயிக்க வானத்தின் உச்சியைத் தொடும்படியாக வளர்ந்து, ஆசையாக அவ்வேடர்கள் வளர்த்த மயிலாகிய வள்ளியும் தோழிமார்களும் அருகே இருக்க மயில்களும் மான்களும் சூழ, செழித்து வளர்ந்த வேங்கைமரமாகி வள்ளிமலை மேலே தோன்றிய மாய வடிவத்தோனே, பெருத்த சமண ஊமையர்கள் பலரும் (வாதிலே உன்னிடம் தோற்று) கழுமுனையில் தொங்க, திருநீறு உன் கருணைக்குப் பாத்திரமான பாண்டியநாட்டில் பரவ, வேதப்பொருள் கொண்ட தேவாரப்பாடல்களைத் தந்தருளிய ஒளிகொள் மேனியனே, பாலகன் ஞானசம்பந்தனாக வந்த முருகா, கழுமலம், பூந்தராய் என்ற பெயர்கொண்ட சீகாழிப்பதியில்* வீற்றிருப்போனே, கவுணியர் குலத்தில் வந்த அரசனே, தேவர் பெருமாளே.
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 774 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, தாந்த, என்னும், தனதன, மற்ற, முனிவர், சண்பை, சீகாழி, கழுமலம், கவுணியர், மயிலொடு, தேவர், பெருமாளே, தகிட, வந்த, பூந்தராய்