பாடல் 773 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத் ...... தனதான |
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத் தெற்கிலூ தைக்கனற் ...... றணியாத சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச் சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக் கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக் கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க் கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய் சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித் தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத் தத்வரூ பக்கிரிப் ...... புரைசாடிக் கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக் குத்துரா வுத்தபொற் ...... குமரோனே கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக் கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே. |
செவ்வானத்து பிறை நிலவுக்கும், கரும்பு வில்லை ஏந்தும் மன்மதனுக்கும், இவை மட்டும் இல்லாமல் தெற்கிலிருந்து வரும் ஊதைக் காற்றுக்கும், நெருப்புப் போலச் சுடுகின்ற தன்மை குறையாத (இன்பகரமான ஓசையைத் தரும்) சித்திர வீணைக்கும், வசை மொழிகளைக் கொண்ட தாய்மார்களுக்கும், வீணாக உள்ளம் வாட்டம் அடைந்து, (விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது) பெரிதாகப் பாடல்களைப் பாடி, (அப்பாடல்களில் அவர்களைத்) துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும், பொன் சேரும் அதிர்ஷ்டம் உள்ளவர் என்றும், கொடையில் கேட்டதைத் தரும் கற்பக மரத்தைப் போன்றவர் என்றும், மூவுலகங்களிலும் விளங்கும் சூரியன் என்றும், கற்ற புலவர்களின் சேமநிதி (நீங்கள்) என்றும், (பொய்யான புகழ் கூறிக்) குப்பையாகிய செல்வ யோகம் படைத்த மனிதர்களின் கைக்குள் நான் அகப்பட்டு வெட்கம் அடைந்து நிற்கின்ற நிலையை நீ கண் பார்ப்பாயாக. சக்கரத்தைக் கையில் கொண்ட திருமாலுக்கும், அந்தத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனுக்கும், என்றும் அழியாதவர் என்று புகழ் பெற்ற பரம சிவனுக்கும் எட்டுதற்கு அரியதான தத்துவ வேதத்தின் தோற்றத்தை உபதேசம் செய்த அந்த ஞான வடிவானவனே, கிரெளஞ்ச மலையின் பெருமையைக் குலைத்து, மாமரத்தில் புகுந்து ஒளித்திருந்த சூரனின் உடல் தொளை படும்படியாக (வேலினால்) குத்திய குதிரை (மயில்) வீரனே, அழகிய குமரனே, அரசனே, நீலோற்பலம், வெட்சி மாலை இவைகளை அணிந்த புயங்களை உடையவனே, சீகாழியில் வீற்றிருக்கும் முத்தமிழ் வல்ல பெருமாளே.
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 773 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, என்றும், தத்தனா, தத்தனத், என்னும், முனிவர், சீகாழி, மற்ற, சண்பை, பெற்ற, தரும், பெருமாளே, கொண்ட, அடைந்து, புகழ், உடல்