பாடல் 771 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ராக மாலிகை
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தனதன தந்தன தந்தன தந்தன தனதன தந்தன தந்தன தந்தன தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான |
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ் சலிகையு நன்றியும் வென்றியு மங்கள பெருமைக ளுங்கன முங்குண மும்பயில் சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும் விருது துலங்க சிகண்டியி லண்டரு முருகி வணங்க வரும்பத மும்பல விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே கருதியி லங்கை யழிந்துவி டும்படி அவுணர டங்கம டிந்துவி ழும்படி கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன் கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்துத வும்புய லிந்திரை கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள் வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர் மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே. |
மதப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும் வருபவரான சமயவாதிகளும், தெய்வம் என்ற ஒன்றே இல்லை என்பவர்களும், பறிதலையராம்* சமண குருமாரும் - இவ்வாறு யாவரும் நின்று கலங்க, அனைவரும் விரும்பத்தக்க தமிழ்ப்பாடல்களை (திருஞானசம்பந்தராக) கூறும் செல்வாக்கையும்**, உபகார குணத்தையும், வெற்றியையும், மங்களகரமான பல பெருமைகளையும், சீர்மையையும், நற்குணத்தையும், நீ குழந்தையாய் விளையாடிய சரவணப் பொய்கையையும், உனது பொறுமையையும், புகழையும், விளங்கும் ஒப்பற்ற வேலையும், வெற்றிச் சின்னங்கள் விளங்க மயில் மீது அமர்ந்து தேவர்களும் மனமுருகி வணங்கும்படியாக வரும் திருவடியையும், பலவிதமான கொடைவண்மையையும், உன் சாமர்த்தியத்தையும், தகுதியையும், தினைப்புனத்து மானாகும் வள்ளியின் கஸ்தூரி, குங்குமம் அணிந்த மார்பிலே மயங்கி நொந்து, அவளது திருவடியை வருடி, மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும், மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான் மறக்கமாட்டேன். ராவணனின் பிழையை மனத்தில் எண்ணி, இலங்கை அழிந்து போகும்படியும், அரக்கர் யாவரும் இறந்துவிழும்படியும், சூரியனும், சந்திரனும் பழைமை முறைப்படி ஒளியுடன் வரும்படியும் செய்த திருமால், மதயானை கஜேந்திரன் பயந்து நடுக்கமுற்று வருந்திநின்ற மடுவினிடையே வந்து உதவிய மேகவண்ணப் பெருமான், லக்ஷ்மியின் கணவன், ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட முகுந்தன், தன்னைக் கொல்லவந்த சகடாசுரனை காலால் மோதிக் கொன்றவன், மருதமரம் குலுங்கி நொறுங்கிப்போகக் கோபித்த வரதன், மாலையைச் சூடியருளும் வாமன வடிவ மூர்த்தி, பெரிய கடல் நொந்து வற்றிப் போகுமாறு ஒரு அம்பைக் கையால் தொடுத்த பராக்ரமசாலி ஆகிய திருமாலின் மருகனே, இந்திரன் தவம் சிரத்தையுடன் செய்த பிரமபுரம் என்ற சீகாழிப்*** பதியிலும், குகனே என்று கூறுபவர் மனத்திலும், அன்போடு பொருந்த வீற்றிருந்து அருளும் பெருமாளே.
* பறிதலை என்பது: சமணர்களில் ஒருவர் குருவாக ஆகும்போது மற்ற குருமார், இப்போது துக்கம் பிற்பாடு சுகம் என்ற மந்திரத்தைச் சொல்லி, அவரது தலைமயிர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கும் வழக்கம்.** சலிகை என்றால் செல்வாக்கு - முருகனின் சலிகை முதலிய 16 அருமையான லக்ஷணங்களை இங்கு தொடங்கி விஜயமும் வரை வெகு அழகாக அருணகிரிநாதர் வரிசைப் படுத்தியது மிக்க இன்பம் தருகிறது.*** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 771 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், தந்தன, பூஜித்த, தனதன, மற்ற, என்னும், பிரமபுரம், சண்பை, முனிவர், சலிகை, சீகாழி, இந்திரன், சொல்லி, குலுங்கி, முகுந்தன், கலங்க, நின்று, பெருமாளே, ஒருவர், நொந்து, வெற்றிச், யாவரும், செய்த