பாடல் 770 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தந்த தந்தன தனதன தனதன தந்த தந்தன தனதன தனதன தந்த தந்தன தனதன தனதன ...... தனதான |
சந்த னம்பரி மளபுழு கொடுபுனை கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர் சந்த தம்பொலி வழகுள வடிவினர் வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர் தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர் செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு ...... முனிவாகித் திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில னென்று சண்டைகள் புரிதரு மயலியர் சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய் மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர் சிந்த அன்றடர் மழைதனி லுதவிய மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல் வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா தந்த னந்தன தனதன தனவென வண்டு விண்டிசை முரல்தரு மணமலர் தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே. |
சந்தனம், நறு மணமுள்ள புனுகு சட்டம் இவைகளை அணிந்துள்ள மார்பினை உடைய மாதர்கள், கை வளையல்களோடு, வேறு நூதனமான நெளிவளைகளும் அணிந்துள்ள சிவந்த கையினர், அன்னம் போல் நடந்து வரும் அழகிய விலைமாதர்கள், எப்போதும் அழகு பொலிகின்ற வடிவத்தினர், வஞ்சக எண்ணங்கள் நிறைந்துள்ள மனத்தை உடையவர்கள், தம்மை நெருங்கி வந்தவர்கள் தங்களுடைய மனம் மகிழும்படி பொருளைத் தர அவர்கள் மேல் மனதார நயவஞ்சகமான பேச்சுக்களைப் பேசி பொருளைக் கவர்கின்ற தந்திரம் வாய்ந்த யோசனைக்காரர்கள், பூமியில் தம்மை அணைப்பவர்கள் தங்களிடம் செம்பொன் இல்லையே என்று சொன்னால் அதிகமாகக் கோபித்து, ஒரு மாத காலத்தில் நேற்றுக் கூட பொருள் உதவி செய்யவில்லை இவன் என்று சண்டைகள் விளைவிக்கும் ஆசைக்காரிகள் (ஆகிய விலைமாதரின்) விஷம் போன்ற உறவும், (அதனால்) வரும் பொல்லாத வறுமையும் என்னை விட்டு அகல, உன்னுடைய திருவருளைப் பாலிப்பாயாக. மந்தர (மலை போன்ற பெரிய கோவர்த்தன) மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்களுக்கு உற்ற துயரம் ஒழியும்படி அன்று அடர்ந்த மழையில் உதவி புரிந்த கண்ணனாகிய திருமால், மேகம் என்னும்படியான நிறத்தைக் கொண்ட திருமால் மெச்சுகின்ற மருகனே, பார்வதி தேவி மகிழும் சரவணபவனே, உயர்வும் விரும்பத்தக்க தன்மையும் கொண்ட யானை முகத்தை உடைய விநாயகர் மகிழும் தம்பியே, நல்ல வஞ்சிக் கொடி போன்ற இடை உடையவளும், குளிர்ந்த மனம் உள்ளவளுமான குறப்பெண்ணாகிய வள்ளியின் மலர் போன்ற திருவடியைப் பணியும் கணவனே, தந்த னந்தன தனதன தன என்று வண்டு இசையை வெளி விட்டு ¡£ங்காரம் செய்யும் நறு மண மலர்கள் உள்ள சண்பக மரங்கள் மேகத்தின் அளவுக்கு உயர்ந்து வளரும் சோலையில், சங்கு நன்கு வெளிப்படுத்துகின்ற முத்தும், நாகங்கள் உமிழும் அழகுள்ள பரிசுத்தமான பிரகாசமான ரத்தினங்களும் ஒளி வீசும் சண்பை என்னும் சீகாழியில்* வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 770 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், தனதன, பூஜித்த, தந்த, சண்பை, என்னும், தந்தன, விட்டு, உதவி, முனிவர், காலத்தில், திருமால், சீகாழி, மனம், மகிழும், கொண்ட, மற்ற, உடைய, சண்டைகள், துங்க, வஞ்சக, தங்கு, சந்த, னந்தன, வண்டு, அணிந்துள்ள, வரும், பெருமாளே, சங்கு, சண்பக, தம்மை