பாடல் 767 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தய்யா தத்தன தானன தானன தய்யா தத்தன தானன தானன தய்யா தத்தன தானன தானன ...... தனதான |
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை மெய்யா ரப்பணி பூஷண மாலைக ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு கையா ரக்கணை மோதிர மேய்பல வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச் செய்வா ரிப்படி யேபல வாணிப மிய்யா ரிற்பண மேயொரு காசிடை செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச் செய்வா ரிற்படு நானொரு பாதகன் மெய்யா எப்படி யோர்கரை சேர்வது செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே மையா ரக்கிரி யேபொடி யாய்விட பொய்சூ ரப்பதி யேகெட வானவர் வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா வையா ளிப்பரி வாகன மாகொளு துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய் மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ் செய்யா முத்தமி ழாகர னேபுகழ் தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத் திய்யா ரக்கழு வேறிட நீறிடு கையா அற்புத னேபிர மாபுர செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே. |
அலங்காரமான சிலை உருவம் என்று சொல்லும்படி, நறுமணம் உடலில் நிரம்ப, அணி ஆபரண மாலைகளைச் சுமந்து, நல்ல ஆடையை அணிந்து, மிக்க காம இன்பம் கொடுப்பவர் ஆகி, தமக்கு ஒப்பாகமாட்டார் இந்த பூமியில் உள்ளோர் என்று சொல்லும்படியாக இரு கைகளிலும் முத்திரை மோதிரம் பல அணிந்தவர்களாய், சொல்லப்போனால், கலக்கம் உறும் மாதவிடாய் நாட்களிலும் தம் உடலை விரும்பிப் பாதுகாத்து இப்படியே பல வியாபாரம் செய்வார்கள். பணத்தைத் தானமாகக் கொடாதவர்கள். ஒரு காசு அளவு கூட வெளிவிடார்கள். வஞ்சனை செய்பவர்கள். பிசாசு போன்றவர்கள். (தமது வேசைத்தொழிலைச்) செய்பவர்கள் கூட்டத்தில் உன் திருவடியைப் போற்றாது அகப்பட்ட நான் ஒரு பாவி. உண்மையாக எப்படி ஒரு கரை நான் சேர்வது? செந்நிற வேளே, அற்புதம் ஆகும் வண்ணம் அந்த ஒப்பற்ற பொருளை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை பொடிபட்டுக் கீழே விழவும், பொய் நிறைந்த அசுரர்களின் தலைவனான சூரனுடைய ஊர் அழியவும், தேவர்கள் எங்களை நல்ல நிலையில் வைத்தருள்வாய், அழகிய பாதங்களை உடையவனே என்று வேண்டி வணங்க வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, சவாரிக்கு உதவும் வாகனமாக குதிரை போன்ற மயிலைக் கொண்ட வாழ்வே, (அகத்தியரால்) உண்ணப்பட்ட ஆழமான ஏழு கடல்கள், ஏழு மலைகள் ஆகியவை கலக்கமுற, பசுமை நிறம் கொண்ட ஒளி பொருந்திய மயில் மேல் வரும் செல்வமே, தேவயானைக்கு நாயகனே, குறப் பெண் வள்ளி மகிழ்கின்ற செந்நிறம் உடையவனே, முத்தமிழுக்கு இருப்பிடமானவனே, புகழ் நிரம்பிய தெய்வீகம் பொருந்திய பரம் பொருளே, சிறந்த குருவே என்று வெற்றிச் சின்னங்கள் ஊத, தீயராகிய சமணர்கள் அந்தக் கழுவில் ஏறும்படி திருநீற்றைப் பரப்பியிட்ட (திருஞானசம்பந்தராக வந்த) திருக்கரத்தனே, அற்புதமானவனே, பிரமாபுரம் என்னும் பெயர் பெற்றதும், வயல்கள் சூழ்ந்ததுமான சீகாழியில்* வீற்றிருக்கும் முருகனே, தேவர்கள் பெருமாளே.
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 767 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, தானன, என்னும், தத்தன, தய்யா, பொருந்திய, உடையவனே, கொண்ட, தேவர்கள், சண்பை, முனிவர், மற்ற, சீகாழி, பெயர், செய்பவர்கள், செய்வா, கையா, ரிப்படி, மெய்யா, எப்படி, சேர்வது, நல்ல, உடலில், பெருமாளே, செய்யா, நான்