பாடல் 751 - விருத்தாசலம் - திருப்புகழ்

ராகம் -
ஹரிகாம்போதி
தாளம் - ஆதி - 2 களை
தாளம் - ஆதி - 2 களை
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி செயமுன மருளிய ...... குளவோனே திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு தெறிபட மறுகிட ...... விடுவோனே ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் கணினெதிர் தருவென ...... முனமானாய் கருமுகில் பொருநிற அரிதிரு மருமக கருணையில் மொழிதரு ...... முதல்வோனே முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட முரணுறு மசுரனை ...... முனிவோனே முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ் முதுகிரி வலம்வரு ...... பெருமாளே. |
வேத மொழியாம் ப்ரணவத்தின் விளக்கத்தைப் பெறுவதற்காக சிவபிரான் உன்னிடத்தில் வணங்க முன்பு அவருக்கு உபதேசித்து அருளிய, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, ஒளிமிக்க மதுரையில் சமணர்களின் உயிர்கள் கழுமரத்தில் கலங்கிச் சிதறுபட வைத்தவனே*, நீக்குவதற்கு அரிதான உன்னுடைய திருவருளில் அன்பில்லாதவர்களைப் போல துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் கண்பார்த்தருள்வாயோ? உலகத்தில் உள்ள யாவரும் புகழும்படியாக திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலிலே வந்து உதவிய வீரனே**, கரிய ரேகைகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூரிய, கண்களை உடைய குற மகள் வள்ளியின் கண்களுக்கு எதிரிலேயே வேங்கை மரமாக முன்பு ஆனவனே, கார்மேகத்தை ஒத்த நிறமுடைய திருமாலின் அழகிய மருமகனே, கருணையோடு உபதேச மொழியை எனக்களித்த முதல்வோனே, நறுமணம் வீசும் மலர் கொண்ட கற்பக விருட்ச நிழலில் வாழும் தேவர்களின் சிறையை விடுமாறு மாறுபட்டு நின்ற அசுரனாம் சூரனைக் கோபித்தவனே, இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே.
* முருகனே திருஞானசம்பந்தராக வந்து சமணரைக் கழுவேற்றினார் என்பது சுவாமிகளின் கருத்து.
** அருணகிரிநாதர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இங்கு குறிப்பிடப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 751 - விருத்தாசலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, உடைய, இங்கு, வந்து, பெருமாளே, முதல்வோனே, முதுகிரி, முன்பு