பாடல் 750 - விருத்தாசலம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்தானன தானன தானன தனத்தானன தானன தானன தனத்தானன தானன தானன ...... தனதான |
குடத்தாமரை யாமென வேயிரு தனத்தார்மதி வாணுத லாரிருள் குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக் குலக்கார்மயி லாமென வேகயல் விழித்தார்கர மேல்கொடு மாமுலை குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை படித்தார்மயி லாமென வேநடை நெளித்தார்பல காமுகர் வார்கலை பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர் படிக்கார்மின லாமென வேநகை புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள் பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ அடைத்தார்கட லோர்வலி ராவண குலத்தோடரி யோர்சர னார்சின மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே அறுத்தாரய னார்தலை யேபுர மெரித்தாரதி லேபுல னாருயி ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா விடத்தாரசு ரார்பதி வேரற அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம் விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர விழித்தாமரை போலழ காகுற மகட்கானவ ணாஎன தாயுறை விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே. |
குடம் என்றும், தாமரை மொட்டு என்றும் (உவமிக்கத் தக்க) இரு மார்பகங்களை உடையவர்கள், பிறைச் சந்திரன் போன்ற ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்கள், இருண்ட மேகம் போல் கருத்த கூந்தல் காடு போல் அடர்ந்து, முதுகில் அலை மோதுவது போலப் புரள, சிறப்புற்ற மேகத்தைக் கண்ட மயிலைப் போலக் களிப்பும், கயல் மீன் போன்ற கண்களும் கொண்டவர்களாய், மாலை அணிந்த கையின் மேல் ஏந்தியுள்ள, அழகிய மார்பு போன்ற, குடத்தை ஒரு பக்கமாகக் கொண்டவர்களாய், யாழ் என்றும், கிளி என்றும் சொல்லும்படியான குயிலின் ஓசை போன்ற குரலை மிழற்றுபவர்களாய், மயில் என்று சொல்லும்படி நெளிந்த நடையினராய், பல காம தூர்த்தர்களின் பெரிய காம சாஸ்திர அறிவைப் பழிப்பவர்களாய், ஆசையை ஆபரணமாக மேற் பூண்டு வேசியர்களாய், படிந்துள்ள கருமேகத்தில் தோன்றும் மின்னல் என்று சொல்லும்படியான ஒளி கொண்ட பற்கள் தெரியச் சிரிப்பவர்களாய், பல பேர்வழிகளின் வாயிதழ் ஊறலை அனுபவிப்பவர்களாய், பொருளை அபகரிப்பவர்களாகிய பழிகாரிகளாகிய விலைமாதர்களின் உறவு எனக்குத் தகுமோ? கடலை அணையிட்டு அடைத்தவராய், ஒப்பற்ற வலிமை வாய்ந்த ராவணனை, அவன் குலத்தோடு அறுத்துத் தள்ளிய ஓர் அம்பைக் கொண்டவர், (அசுரர்களின்) கோபத்தை இவ்வாறு அழித்து ஒழித்தவர், மேகத்துக்கு ஒப்பான கருநிறம் கொண்ட ராமபிரானின் மருகனே, பிரமனின் தலையை அறுத்துத் தள்ளியவர், திரிபுரத்தை எரித்தவர், அந்தத் திரிபுரத்தில் இருந்த அறிவுள்ள (மூன்று) அசுரத் தலைவர்களின் உயிரைக் காத்தருளியவர்* ஆகிய சிவபெருமானின் பாதி உடலில் உள்ள உமாதேவி அருளிய குழந்தையே, விஷம் போன்ற கொடிய குணம் வாய்ந்த அசுரர்களுடைய ஊர்கள் வேருடன் அற்று விழ சம்ஹாரம் செய்தாய், ஒளி வீசும் வேலாயுதத்தால் வீரச் செயல்களைப் புரிந்தாய், தேவர்கள் சிறையும் வறுமையும் நீங்கவும், அவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும் செய்வித்த தாமரை போன்ற கண்களை உடைய அழகனே, குறமகள் வள்ளிக்குப் பிரியமுள்ள அழகனே, என்னுடைய தாயான விருத்தாம்பிகை அமர்ந்துள்ள விருத்தாசலத்தில் வாழும் மயில் வாகனப் பெருமாளே.
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 750 - விருத்தாசலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, என்றும், தனத்தானன, லாமென, வாய்ந்த, மயில், கொண்ட, மூன்று, அழகனே, ஆகிய, சொல்லும்படியான, அறுத்துத், உடையவர்கள், மேல்கொடு, யாமென, வாயிதழ், பெருமாளே, போல், தாமரை, கொண்டவர்களாய்