பாடல் 748 - திருவேட்களம் - திருப்புகழ்

ராகம் -
மனோலயம்
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தாத்தன தானன தாத்தன தானன தாத்தன தானன ...... தனதான |
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன் வாழ்க்கையை நீடென ...... மதியாமல் மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள் மாப்பரி வேயெய்தி ...... அநுபோக பாத்திர மீதென மூட்டிடு மாசைகள் பாற்படு ஆடக ...... மதுதேடப் பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி பாற்கட லானென ...... வுழல்வேனோ சாத்திர மாறையு நீத்தம னோலய சாத்தியர் மேவிய ...... பதவேளே தாத்தரி தாகிட சேக்கெனு மாநட தாட்பர னார்தரு...... குமரேசா வேத்திர சாலம தேற்றிடு வேடுவர் மீக்கமு தாமயில் ...... மணவாளா வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே. |
ஒரு சிறிய அளவு கூட வாக்குத் தவறாத மனைவியுடன் நடத்தும் இல்லற வாழ்க்கையைப் பெரிதென மதியாமல், மிருகங்கள் போன்ற மனிதர்கள் யாராயிருந்தாலும் ஏற்றுக்கொண்டு அவர்களோடு அனுபவிக்கும் துர்க்குணப் பொது மாதர்களிடம் மிக்க அன்பைப் பூண்டு, வேசையர்களை அனுபவிக்கும் பாத்திரம் இவன் என்று பிறர் ஏச, மூண்டு எழுகின்ற ஆசைகளில் ஈடுபட்டு, (வேசையர்க்குக் கொடுக்கப்) பொன்னைத் தேட பூமியிலுள்ள மூர்க்க லோபிகளையே எனது கவிகளில் பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலே இவன் என்று வீணுக்குப் புகழ்ந்து திரிவேனோ? ஆறு* சாஸ்திரங்களையும் கடந்து, மனம் லயித்து ஒடுக்கவல்ல சாமர்த்தியசாலிகள் போற்றும் திருவடிகளை உடைய வேளே, தாத்தரி தாகிட சேக் என்ற தாளத்துக்கு ஏற்ப சிறந்த நடனம் செய்யும் பாதங்களை உடைய நடராஜப் பெருமான் தந்த குமரேசனே, அம்புக் கூட்டங்களைச் சுமந்து திரியும் வேடர்களின் மிக்க அமுதைப் போன்ற, மயிலை ஒத்த, வள்ளியின் மணவாளனே, அறியப் படுவதான வேதங்களின் கோஷம் முழங்கும் அழகிய திருவேட்களத்** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* ஆறு சாஸ்திரங்கள் பின்வருமாறு:(1) வேதாந்தம் (உபநிஷதம்)(2) வைசேஷிகம் (கணாதரால் ஸ்தாபிக்கப்பட்ட தர்க்க சாஸ்திரம்)(3) பாட்டம் (குமாரில பட்டரால் பிரசாரம் செய்யப்பட்ட வேதமே தெய்வம் என்ற சாஸ்திரம்)(4) ப்ரபாகரம் (ப்ரபகரன் என்பவரால் வேத வேதாந்தப் பொருட்களை ஆராயும் சாஸ்திரம்)(5) பூர்வ மீமாம்சை (வேதத்தின் கர்ம காண்டத்தை ஆராய ஜைமினி முநிவர் இயற்றிய சாஸ்திரம்)(6) உத்தர மீமாம்சை (வேதத்தின் பிற்பகுதியான ஞான காண்டத்தை ஆராய வியாசரால் எழுதப்பட்ட பிரம்ம சூத்திரம் முதலிய சாஸ்திரம்.
** திருவேட்களம் சிதம்பரத்துக்குக் கிழக்கே 2 மைலில் உள்ள தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 748 - திருவேட்களம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சாஸ்திரம், தானன, தாத்தன, உடைய, மீமாம்சை, வேதத்தின், ஆராய, காண்டத்தை, இவன், அனுபவிக்கும், மேவிய, மதியாமல், தாத்தரி, தாகிட, பெருமாளே, மிக்க