பாடல் 737 - திருவதிகை - திருப்புகழ்

ராகம் - .... ;
தாளம் -
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான |
பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப் பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல் பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப் படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர் சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத் துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன் சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற் சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக் கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக் கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச் செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித் திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித் திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே. |
ரேகைகளோடு கூடிய, கயல் மீன் போன்ற கண்கள் குவியவும், குயிலையும் கிளியையும் ஒத்ததான பேசும் மொழி பதற்றத்துடன் வெளி வரவும், பவளத்தின் நிறம் கொண்ட வாயிதழ்கள் விளைவிக்கும் அமுது போன்ற ஊறலை உண்டும், ஒளி வீசும் முத்து மாலை அணிந்த, (சந்தனக்) கலவை பூண்ட, மார்பாகிய மலை அசைவு தரவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனது காமசாஸ்திரக் குப்பையை உணர்ந்துள்ள பொது மாதர்களின் பூக்கள் சொருகியுள்ள கூந்தல் சரியவும், தளர்ந்துள்ள சிறிய இடை துவளவும், ஆடை விலகவும், காம ஆசையை விளைவித்து உருகி எதிரே சொரியப்பட்ட பூக்களின் வாசனை பரந்துள்ள படுக்கையில் புகுந்து இன்பம் தரும் இனிமையான புணர்ச்சியிலே சுழலுகின்ற என் மனக் கவலையை நீக்கி அருள்வாயாக. கரிய நிறம் கொண்ட அசுரனாகிய ராவணனது மகுடம் அணிந்த தலைகள் பத்தும் அற்று விழ, வேகமாகச் சென்று அம்பைச் செலுத்திய ராமனின் (திருமாலின்) மருகனே, குமரேசனே, கயிலை மலைக்கு உரியவனாகிய சிவ பெருமானுடைய இடது பாகத்தில் உள்ள பார்வதி விருப்பத்துடன் (கொடுக்கக்) கருதிய (பால் அமுது ஊட்டவும்), பாடல்கள் நிறையப் பாடும் திறத்தைப் பெற்ற கீர்த்தியை உடைய திருஞான சம்பந்தப் புலவனே, திரண்ட கமுகு மரத்தின் உச்சியில் இடறியும், பல வாழைகளின் குலைகள் சிதறிடவும், நிறைந்த வயல்களில் நெற்கதிர்கள் அலைபாயவும், அலைகள் வீசி, திமிதிமி எனப் பறைகள் முழங்கவும், பெருகி வரும் நீருடைய கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமாளே.
* திருவதிகை பண்ணுருட்டிக்கு கிழக்கே 2 மைலில் கெடிலநதிக் கரையில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 737 - திருவதிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனனத், உடைய, உள்ள, அணிந்த, கொண்ட, பெருமாளே, நிறம், அமுது