பாடல் 738 - திருவதிகை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன ...... தனதான |
விடமும் வேலன மலரன விழிகளு மிரத மேதரு மமுதெனு மொழிகளும் விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி மிகவு மாண்மையு மெழினல முடையவர் வினையு மாவியு முடனிரு வலையிடை வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா இடரு றாதுனை நினைபவர் துணைகொள இனிமை போலெழு பிறவியெ னுவரியி னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள் ககன பூபதி யிடர்கெட அருளிய இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே படரு மார்பினி லிருபது புயமதொ டரிய மாமணி முடியொளி ரொருபது படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய் பரவை யூடெரி பகழியை விடுபவர் பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே அடர வேவரு மசுரர்கள் குருதியை அரக ராவென அலகைகள் பலியுண அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா அமர ராதிய ரிடர்பட அடர்தரு கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே. |
விஷமும், வேலும் போன்றனவாகிய, மலரை ஒத்த கண்களும், ருசியைத் தரும் அமுதம் போல் இனிய பேச்சுக்களும், உற்சாகத்தால் வளர்ந்துள்ள இரு மார்பகங்களும் இன்பம் தருவனவாய்க் கொண்டு, மிக்க அகங்காரத்தையும் அழகு நலத்தையும் உடையவர்களின் பெரிய வலையில் என் முன்வினையும், உயிரும் ஒருசேர பகிரங்கமாகச் சிக்கும்படி (அந்த வலையை) வீசுகின்ற விஷமிகளாகிய வேசிகளுடன் சேர்ந்து துன்பப்படாமல், உன்னைத் தியானிப்பவர்களின் துணையைப் பெறுதற்கு, இன்பம் போலக் காணப்படும் ஏழு பிறவிகள் என்ற கடலிடையே அகப்பட்டு அழியாமல், இனியேனும் இரு வினை (நல்வினை, தீவினை) என்கின்ற இழிந்த நிலையில் அழியாமல், தேவர்கள், முனிவர்கள், விண்ணுலக அரசனான இந்திரனின் துன்பங்கள் தொலைய அருள் புரிந்த இறைவனே, கீதத்துடன் தினமும், உனது பன்னிரண்டு புயங்களைப் போற்றிச் செய்து உரைக்க (எனக்கும்) அருள் புரிவாயாக. பரவி அகன்றுள்ள மார்பின் பக்கத்தில் உள்ள (ராவணனது) இருபது புயங்களும், அருமையான சிறந்த ரத்தினக் கி¡£டங்கள் விளங்கும் ஒப்பற்ற பத்து தலைகளும் பூமியில் அறுந்து விழும்படி நிகரற்ற அம்பைச் செலுத்தியவரும், சந்தர்ப்பத்தை ஆராய்ந்தறிந்து கடலின் மீது நெருப்பு வீசும் அம்பை விடுத்தவரும், தம்மைப் போற்றும் அடியவர்களின் வினைகள் கெட அருள் பாலித்து, பரந்துள்ள திருப்பாற்கடலில் பாம்பாகிய ஆதிசேஷனின் மேல் துயில்பவருமான திருமாலின் மருகனே, நெருங்கி வந்த அசுரர்களின் ரத்தத்தை அரகரா என்று கூவி பேய்கள் உணவாக உண்ண, அலைகள் வீசும் கடலும் கூச்சலிட, சண்டை செய்த மயில் வீரனே, தேவர்கள் முதலானோர் துன்பப்படும்படி நெருங்கி எதிர்த்த கொடுமையான அசுரர்கள் (வாழ்ந்திருந்த) திரிபுரங்களை எரித்த திருவதிகை** என்னும் பெரிய ஊரில் வீற்றிருப்பவனே, (இந்திரன் மனைவி) சசியின் மகளான தேவயானையின் பெருமாளே.
* 'இசையில் நாள்தொறும்' என்ற சொற்கள் அன்வயப் படுத்தப்பட்டுள்ளன.
** சிவபெருமான் திரிபுரத்தை எரித்த தலம் திருவதிகை. இது கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 2 மைலுக்குள் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 738 - திருவதிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானன, அருள், வீசும், நெருங்கி, எரித்த, தேவர்கள், பெரிய, பரவு, பெருமாளே, இன்பம், அழியாமல்