பாடல் 721 - சேயூர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனனாதன தானன தானன தனனாதன தானன தானன தனனாதன தானன தானன ...... தனதான |
முகிலாமெனும் வார்குழ லார்சிலை புருவார்கயல் வேல்விழி யார்சசி முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர் முலைமாலிணை கோபுர மாமென வடமாடிட வேகொடி நூலிடை முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார் அகிசேரல்கு லார்தொடை வாழையின் அழகார்கழ லார்தர வேய்தரு அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி அனமாமென யாரையு மால்கொள விழியால்சுழ லாவிடு பாவையர் அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ ககனார்பதி யோர்முறை கோவென இருள்காரசு ரார்படை தூள்பட கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா கமலாலய நாயகி வானவர் தொழுமீசுர னாரிட மேவிய கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா மகிழ்மாலதி நாவல்ப லாகமு குடனாடநி லாமயில் கோகில மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா மதிமாமுக வாவடி யேனிரு வினைதூள்பட வேயயி லேவிய வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே. |
மேகம் என்று சொல்லத் தக்க நீண்ட கூந்தலை உடையவர்கள். வில்லைப் போன்ற புருவத்தை உடையவர்கள். கயல் மீன், அம்பு இவைகளைப் போன்ற கண்களை உடையவர்கள். சந்திரனைப் போன்ற முகம் உடையவர்கள். முத்துப் போன்ற பற்களைக் கொண்டு சிரிக்கின்ற விலைமாதர்கள். மார்பகங்கள் பெருமை பொருந்திய இரண்டு கோபுரங்களைப் போல் விளங்க மணி வட மாலைகள் அசைந்து விளங்க, கொடியைப் போலவும், நூல் போலவும் நுண்ணிய இடையில் வேலைப்பாடு சிறந்த பட்டுப் புடைவை விளங்கிய, மயில் போன்ற சாயலை உடையவர்கள். பாம்பை ஒத்த பெண்குறியை உடையவர்கள். வாழை போன்ற தொடை அழகினர்கள். சிலம்பு ஒலிக்க, பொருந்திய அழகியர்கள். பொன்னாலாகிய பாத கிண்கிணி ஒலி செய்ய நடந்து சென்று, அன்னப் பறவை என்னும்படி யாரையும் மோகம் கொள்ளும் கண்களால் சுழல விடுகின்ற பெண்களுடைய படுக்கையில் அடியேன் உடல் அழிபடுவேனோ? விண்ணுலக ஊரில் உள்ளவர்கள் கோ என்று முறையிட இருளைப் போலக் கரிய அசுரர்களுடைய சேனைகள் தூளாகவும் கடலும், (சூரனது )எழு கிரிகளும், பிற மலைகளும் பொடிபடும்படியாகவும் செலுத்திய வேலாயுதனே, தாமரையில் கோயில் கொண்டிருக்கும் நாயகி, தேவர்கள் தொழுகின்ற சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ளவள், கருணைக்கு இருப்பிடமானவள், ஞான பரதேவதை உமாதேவி அருளிய குழந்தையே, மகிழ மரம், மல்லிகை, நாவல் மரம், பலா, பாக்கு மரம் ஆகியவைகளில் விளையாடும் நிலா ஒளி, மயில், குயில் ஆகியவை மகிழ்ந்திருக்கும் நாட்டில் உள்ள வள்ளி மலையில் இருந்த பெருமை மிக்க வள்ளி நாயகியின் கணவனே, சந்திரனைப் போன்ற அழகிய முகத்தனே, அடியேனுடைய இருவினைகளும் தூளாகவே அம்பைச் செலுத்தியவனே, வளவா புரி என்னும் சேயூரில் வாழும் மயில் வாகனப் பெருமாளே.
* சேயூர் இப்போது செய்யூர் என்று வழங்கப்படும். இதற்கு வளவாபுரி என்ற பெயரும் உண்டு. மதுராந்தகத்துக்கு கிழக்கே 16 மைலில் உள்ள தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 721 - சேயூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவர்கள், தானன, தனனாதன, நாயகி, மரம், மயில், உள்ள, வள்ளி, போலவும், பெருமை, வளவாபுரி, பெருமாளே, சந்திரனைப், பொருந்திய, விளங்க