பாடல் 720 - மதுராந்தகம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதாந்தன தான தனந்தன தனதாந்தன தான தனந்தன தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான |
மனைமாண்சுத ரான சுணங்கரு மனம்வேந்திணை யான தனங்களு மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி மயமாம்பல வான கணங்குல மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார இனவாம்பரி தான்ய தனம்பதி விடஏன்றெனை மோன தடம்பர மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா இடவார்ந்தன சானு நயம்பெறு கடகாங்கர சோண வியம்பர இடமாங்கன தாள ருளும்படி ...... யென்றுதானோ தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார் தமதாஞ்சுத தாப ரசங்கம மெனவோம்புறு தாவ னவம்படர் தகுதாம்பிர சேவி தரஞ்சித ...... வும்பர்வாழ்வே முனவாம்பத மூடி கவந்தன முயல்வான்பிடி மாடி மையைங்கரர் முகதாம்பின மேவு றுசம்ப்ரம ...... சங்கணாறு முககாம்பிர மோட மர்சம்பன மதுராந்தக மாந கரந்திகழ் முருகாந்திர மோட மரும்பர்கள் ...... தம்பிரானே. |
மனைவி, பெருமை பொருந்திய மக்கள் ஆகிய சோர்தலைத் தருபவர்களும் மனம் நொந்து வெந்து போவதற்கு இடம் தருவதான செல்வங்களும், இறந்து விடப் போகின்ற என்னைப் பெற்ற தெய்வத்துக்கு ஒப்பான தாய், உற்றாராய்ப் பயனற்றவர்களான பிறர் மயமான பலவகைப்பட்ட கூட்டத்தார், குலத்தார் என்கின்ற மயக்கமும், யான், எனது என்று கூடியுள்ளனவாகிய, அளவு கடந்து செல்லும் குணமும் நோக்கமும், இனிமைக்கும், தக்கதாகப் பொருந்திய தாண்டிச் செல்லும் குதிரைகள், தானியங்கள், சொத்துக்கள், இருக்கும் ஊர் இவை எல்லாம் விட்டு நீங்கும்படி, என்னை ஏற்றுக்கொண்டு, மோன நிலையையும், மேலான மிக்கு நிற்கும் தெய்வத்தையும் நான் கண்டு களிக்க, கூட்டமான பெருமை தங்கிய தேவர்கள் ஏசுதலின்றி (நன்கு பொருந்திய) இடம் கொண்டு நிறைந்துள்ள, முழந்தாள்* நல்லதான, கடகம் அணிந்துள்ள கைகள், சிவந்த உடல், (இவைகளுக்கு) மேலான இடமாகிய, பெருமை பொருந்திய உனது திருவடியை அருளும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ? தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட தன என்ற ஓசைகள் ஒலிக்கும்படியான மிக மேலான நடனத்தைச் செய்கின்ற எம்பிரானாகிய சிவபெருமானுடைய குழந்தையே, அசையாப் பொருள், அசையும் பொருள் என்றவாறு அனைத்தையும் பாது காத்தல் செய்யப் படைத்தவனே, புதுமை நிறைந்த, தக்கதான, தாம்பிரசூடம்** எனப்படும் சேவலால் வணங்கப் படுபவனே, இன்பம் தருகின்ற தேவர்கள் செல்வமே, (முருக வேள் நினைக்கும்) முன்னே, தாண்டி வேகமாய் வந்த திருவடிகளை உடையவரும், பெருச்சாளி*** வணக்கம் செய்யும்படி முயற்சி எடுத்துக் கொண்டவரும், பெண் யானை போன்ற வள்ளியின் பக்கத்தில் இமைப்பொழுதில் (காட்டானையாக) ஒளி விட்டு விளங்கியவருமான, ஐங்கரருமான விநாயக மூர்த்தியின் எதிரில் தோன்றிய தம்பியே, பொருந்தியுள்ள களிப்பு நிறைந்த அழகு செய்கின்ற கூட்டமாகிய ஆறு திரு முகங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கின்ற பாக்கியவானே, மதுராந்தகமாகிய சிறந்த நகரில் விளங்கும் முருகனே, நல்ல உறுதியான பக்தியுடன் உள்ள தேவர்களின் தம்பிரானே.
* முருக வேளின் விசுவ ரூப நிலை தேவர் கூட்டத்துக்கு சானுவில் (முழந்தாளில்) காணப்பட்டது.
** தாம்பிர சூடம் - இது சிவந்த கொண்டையை உடைய சேவலைக் குறிக்கும். சூரனின் ஒரு பகுதி சேவலாக மாறி, முருகனது கொடியில் அமர்ந்து சேவை செய்தது.
*** கஜாமுகாசுரன் பெருச்சாளி வடிவத்துடன் விநாயகரை எதிர்க்க வந்தான். அப்போது அதன் மீதேறி அவனை வீழ்த்தி வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 720 - மதுராந்தகம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதாந்தன, தனந்தன, பொருந்திய, மேலான, பெருமை, சிவந்த, முருக, நிறைந்த, செய்கின்ற, பொருள், தேவர்கள், செல்லும், தெனதோங்கிட, துனங்கிட, தம்பிரானே, இடம், விட்டு