பாடல் 714 - உத்தரமேரூர் - திருப்புகழ்

ராகம் - காபி
தாளம் - அங்கதாளம் - 5 1/2
- எடுப்பு - 1/2 தள்ளி
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
- எடுப்பு - 1/2 தள்ளி
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தனன தனதான தனன தனன தனதான தனன தனன தனதான ...... தனதான |
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள் துகளி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர் சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள் அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி அரியு மயனு மொருகோடி ...... யிவர்கூடி அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும் அறிவு ளறியு மறிவூற ...... அருள்வாயே வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக மகர சலதி அளறாக ...... முதுசூரும் மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள் நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே. |
வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள், எட்டுத் திக்குப் பாலகர்கள் (*1), முநிவர்கள் குற்றமில்லாத ரிஷிகள் ஏழு பேர் (*2), சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள், சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச மாயா அதிகாரிகள், பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள் (*3), வெகு தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள், அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக் கோடிக்கணக்கான அடியார்கள், திருமால், பிரமன், ஒரு கோடி பேர் - இவர்களெல்லாம் கூடி, அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது திருவடிகளை, அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக. கிரெளஞ்சம் முதலிய மலைகள் தவிடு பொடியாக, அசுரர்களின் ஊர்கள் அழிவடைய, மகர மீன்கள் உள்ள கடல் சேறாக, பழைய சூரனும் அழிவுற, பேய்கள் நடனம் செய்ய, விஜய லக்ஷ்மி மகிழ்ச்சி அடைய, அசுரர்களின் தலைகள் சிதறிவிழ, இரையைத் தேடிவந்த நாய்களுடன், நரிகளும், காக்கைகளும், பசி நீங்க, ரத்த வெள்ளம் அலைமோதி ஓட, யமனும் அச்சமுற்று உனது திருவடிகளைத் துதிக்க, மயிலில் ஏறி, மகிமைவாய்ந்த திருக்கரத்து வேலாயுதத்தை விரைவாகச் செலுத்தும் முருகனே, உத்தரமேரூர் (*4) என்ற தலத்தில் வீற்றிருப்போனே, தேவர்களின் பெருமாளே.
*1 அஷ்டதிக்குப் பாலகர்கள் (எண்திசையைக் காப்பவர்கள்) பின்வருமாறு:இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
*2 சப்தரிஷிகள் பின்வருமாறு:அகஸ்தியர், புலஸ்தியர், ஆங்கீரசர், கெளதமர், வசிஷ்டர், காச்யபர், மார்க்கண்டர்.
*3 நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர்.இவர்கள் குகைகளில் இருந்து சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.
*4 உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 18 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 714 - உத்தரமேரூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, கொள்ள, அறிந்து, அறிய, பின்வருமாறு, உள்ள, முடியாத, அக்கினி, அசுரர்களின், உத்தரமேரூர், பேர், உனது, முதலிய, அறிவு, அடியேனும், மொருகோடி, தவிடு, பொடியாக, தகிட, பெருமாளே, விஜய, பாலகர்கள்