பாடல் 715 - உத்தரமேரூர் - திருப்புகழ்

ராகம் -
ஸிந்து பைரவி
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தான தந்த தான தந்த தான தந்த தான தந்த தான தந்த தான தந்த ...... தனதான |
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து சோரு மிந்த நோய கன்று ...... துயராற ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும் ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே. |
தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை, அடைத்திருக்கும் கோழை, மேலே பொங்கும் ரத்தம் - இவையாவும் ஒரு பிண்டமாய் உருண்டு ஒரு வடிவம் ஏற்பட்டு, பருத்த, பாவத்துக்கு இடமான, சா£ரத்தை வீணாகச் சுமந்து, நான் மெலிவுற்று, தளர்கின்ற இந்த பிறவி நோய் நீங்கி என் துயரம் முடிவுபெற, விஷத்தை உண்ட எம் தலைவன் சிவன், எல்லா உலகங்களையும் உண்ட திருமால், பிரமன், மற்றும் வேதங்கள், ஆகமங்கள் யாவும் புகழ்கின்ற உன் திருவடியும், திருமுகங்கள் ஆறையும், பன்னிரண்டு தோள்களையும், அழகிய கரத்தில் விளங்கும் வெற்றி வேலாயுதத்தையும் என்றைக்கு நான் தியானிப்பேனோ? இளம்பிறையைச் சூடிய சிவனும், வேத மந்திர ஸ்வரூபியுமான அம்பிகை, கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே, ஐந்து மாயை (*1), ஐந்து வேகம் (*2), ஐந்து பூதம் (*3), ஐந்து நாதம் (*4) இவை வாழ்கின்ற அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே, வேண்டிய சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம் யானையைக் கண்டு வேடர்குலப் பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே, வீர லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும் மங்களமாக வீற்றிருக்கிற உத்தர மேரூரில் (*5) ஆட்சிபுரியும் பெருமாளே.
(*1) மாயை ஐந்து - தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம்.
(*2) வேகம் ஐந்து பலவகைப்படும் - வாயுவேகம், மனோவேகம், ஒளிவேகம், ஒலிவேகம், அசுவவேகம். வேகம் சக்தியென கொண்டால் - இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, சிற்சக்தி, பராசக்தி. வேகம் புலனாகக் கொண்டால் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
(*3) ஐந்து பூதம் - நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.
(*4) ஐந்து நாதம் - தோல் கருவி - மத்தளம், உடுக்கை, துளைக் கருவி - குழல், நாதஸ்வரம், நரம்புக் கருவி - யாழ், வீணை, கஞ்சக் கருவி - ஜாலரா, ஜலதரங்கம், மிடற்றுக் கருவி - வாய்ப்பாட்டு, கொன்னக்கோல்.
(*5) உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 18 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 715 - உத்தரமேரூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஐந்து, தந்த, மங்கை, கருவி, வேகம், மாயை, வந்த, மைந்து, கொண்டால், பூதம், நாதம், பொருள்கள், லக்ஷ்மி, பெருமாளே, முண்ட, கோழை, பீளை, ரண்டு, கண்டு, நான், தோல், உண்ட