பாடல் 712 - திருப்பேர்ருர் - திருப்புகழ்

ராகம் -
....; தாளம் -
தான தானன தானன தான தானன தானன தான தானன தானன ...... தனதான |
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில் சேய சாயல்க லாமதி ...... முகமானார் தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை சேலு லாவிய கூர்விழி ...... குமிழ்நாசி தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர் சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய கார ணாகரு ணாகர ...... முருகோனே போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு பூப சேவக மாமயில் ...... மிசையோனே போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு போரி மாநகர் மேவிய ...... பெருமாளே. |
பெருமை விளங்கும் அன்னத்துக்கு ஒப்பான அழகிய நடை, சிறந்த மயிலுக்கு ஒப்பான செம்மை வாய்ந்த சாயல், பூரண சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட விலைமாதர்கள் தேன் போன்று இனிய அழகிய பேச்சு, மேருமலை போல இளமை விளங்கும் பெரும் மார்பகங்கள், சேல் மீன் போன்ற கூரிய கண்கள், குமிழைப் போன்ற மூக்கு, மாலை விளங்கும் நீண்ட கூந்தல், மூங்கில் போன்று வழுக்கும் தோள்களை உடையவர்கள், இவர்களின் இணக்கத்திலேயே திரிகின்ற என்னை, உனது திருவருளால், சாம வேதம் வல்ல மறையோர்களும், தேவர்களும் போற்றி தினந்தோறும் புது மலர்களைத் தூவிய உனது திருவடியில் விழுந்து வணங்கும் விவேகத்தை நிரம்ப அருள் செய்வாயாக. மேகம் உலாவும் நீண்ட புனத்தில் உள்ள வேடர்கள் வாழ்ந்த பெரிய வள்ளிமலை மேலே இருந்து, காவல் புரிந்த வள்ளி மீது ஆசை கொண்டு அவளை அணைந்தவனே, யாவரும் அறிய ஆகமம், வேதம், புராணம் பலவற்றையும் (சம்பந்தராக வந்து தேவாரமாக) ஓதித் துதித்துள்ள மூல காரணனே, கருணாகரனே, முருகனே, போர் செய்ய வந்த சூரன் மீது வேலாயுதத்தை ஏவி, கடலும் சேறு படும்படிச் செய்த அரசனே, வீரனே, அழகிய மயிலின் மீது அமர்வோனே, தாமரை மலரில் வாழ்பவன் (பிரமன்), திருமால், உமாதேவியைப் பாதி பாகத்தில் கொண்ட ஆதியாகிய சிவபிரான் ஆகிய மூவரும் தொழுகின்ற திருப் போரூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 712 - திருப்பேர்ருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, லாவிய, அழகிய, மீது, விளங்கும், நீண்ட, உனது, வேதம், மாமயில், போன்று, கொண்ட, பெருமாளே, காவல், ஒப்பான, தூவிய, பாதி